
88 வயதான மூத்த மலையாள நடிகர் டிபி மாதவன் மறைவு
1975ல் சினிமாவில் நடிப்பதற்காக நுழைந்த டிபி மாதவன் கிட்டத்தட்ட 600 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மேலும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். அது மட்டுமல்ல மலையாள திரையுலகின் நடிகர் சங்கமான அம்மா துவக்கப்பட்ட போது அதன் முதல் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றவர் இவர்தான்.
அதே சமயம் இவருக்கு மனைவி ஒரு மகன், மகள் ஆகியோர் இருந்தாலும் சில பிரச்சினைகள் காரணமாக கிட்டத்தட்ட 30 வருடங்களாக குடும்பத்தை விட்டு பிரிந்தே வாழ்ந்து வந்தார் மாதவன். கடந்த சில வருடங்களாகவே கேரளாவில் பத்தினாபுரத்தில் உள்ள ஆதரவற்றோர் புகலிடமான காந்தி பவனில் தான் இவர் வசித்து வந்தார். இவரது மகன் ராஜா கிருஷ்ண மேனன் ஒரு இயக்குனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கூட பாலிவுட்டில் அக்ஷய் குமார் நடித்த ஏர் லிப்ட் என்கிற படத்தை இயக்கியிருந்தார். கடைசி வரை தன் மகன் தன்னை வந்து பார்ப்பார் என எதிர்பார்த்த டி.பி மாதவன் அந்த ஆசை நிறைவேறாமலேயே மறைந்து விட்டார்.
இவருடன் பல படங்களில் இணைந்து நடித்த நடிகர் மோகன்லால் இவரது மறைவு குறித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நான்கு தலைமுறையாக 600 படங்களுக்கு மேல் நடித்த நமது அன்பு அண்ணன் மாதவன் மறைந்து விட்டார். அவருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளேன்.. அவர் எப்போதுமே என்னை ஒரு மகன் போலவே நினைத்து பாசம் காட்டியவர். தனது அன்பான புன்னகையால் ஒவ்வொருவரின் இதயங்களையும் வென்ற மாதவன் அண்ணனுக்கு மிகுந்த வலியுடன் பிரியாவிடை கொடுக்கிறேன்: என்று கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!