
நானா படேகர் கோரிக்கையும்... அடூர் கோபால கிருஷ்ணன் பதிலும்...
சமீபத்தில் கேரளாவில் இந்திய கேரள திரைப்பட விழா துவங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் கேரளா வந்திருந்தார். அவர் வருகை தந்த தகவலை கேள்விப்பட்டு அவரை தனது இல்லத்திற்கு வரவழைத்து உபசரித்துள்ளார் அடூர் கோபாலகிருஷ்ணன்.
இந்த சந்திப்பின்போது அடூர் கோபாலகிருஷ்ணனிடம், “இத்தனை வருடங்களில் ஒரு முறையாவது உங்கள் படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வராதா என்று ஏங்கிக் கொண்டிருந்தேன். அடுத்த நீங்கள் ஒரு படம் இயக்கினால் நிச்சயம் என்னை மறந்து விடாதீர்கள்” என்று கேட்டுக் கொண்டார்.
அதற்கு பதில் அளித்த அடூர் கோபாலகிருஷ்ணன், “நான் பொதுவாக வட மாநில படங்களை வெளிநாட்டு படங்கள் போல நினைப்பதால் அந்தப் பக்கம் போவதே இல்லை. நான் இனி படம் இயக்குவேனா என்று தெரியாது.. இயக்க மாட்டேன் என்றும் சொல்ல முடியாது.. அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் நிச்சயமாக அழைக்கிறேன். உங்கள் முகத்தில் மலையாளி சாயல் தெரிகிறது” என்று கூறியுள்ளார். இந்த சந்திப்பின்போது ஆஸ்கர் விருது புகழ் ரசூல் பூக்குட்டியும் உடனிருந்தார்.
இதற்கு முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு திலீப், காவ்யா மாதவன் இணைந்து நடித்த "பின்னேயும்" என்கிற படத்தை அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார் என்பதும் அந்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!