
நான் உங்கள் அடிமை இல்லை; ரசிகர்களிடம் அல்போன்ஸ் புத்திரன் காட்டம்
ஆரம்பத்தில் அமைதியாக பொறுமையாக பதில் சொல்லி வந்த இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், தொடர்ந்து நெட்டிசன்களின் கிண்டல்கள் அதிகமாகி வந்ததால் கோபமடைந்து, நான் உங்கள் அடிமை இல்லை.. என்னை விமர்சிக்கும் உரிமையும் உங்களுக்கு நான் தரவில்லை என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறும்போது, “நீங்கள் என்னை பற்றியும் என்னுடைய கோல்டு திரைப்படம் பற்றியும் உங்களை திருப்தி படுத்தவில்லை என்கிற காரணத்திற்காக கிண்டலடிப்பது உங்களுக்கு வேண்டுமானால் சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் எனக்கு அப்படி இல்லை.. அதனால், நான் தற்போது எனது முகத்தை காட்டாமல் இணையதளத்தில் என் எதிர்ப்பை தெரிவித்து வருகிறேன். நான் உங்கள் அடிமை இல்லை.. அது மட்டுமல்ல, பொதுவெளியில் என்னை கிண்டல் அடிப்பதற்கும் விமர்சிப்பதற்கும் எந்த உரிமையையும் நான் உங்களுக்கு கொடுக்கவில்லை.
உங்களுக்கு பிடித்திருந்தால் என்னுடைய படங்களை பாருங்கள்.. மேலும் என்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் வந்து உங்களுடைய கோபத்தை காட்டாதீர்கள். தொடர்ந்து இதே போல் செய்தால் நான் இணையதளத்தை விட்டு மறைந்து விடுவேன். முன்பு இருந்ததைப் போல நான் இப்போது இல்லை.. நான் எனக்கும், என்னுடைய குடும்பத்தாருக்கும், நான் கீழே விழும்போதெல்லாம் என்னை தாங்கி பிடித்து உறுதுணையாக இருப்பவர்களுக்கும் உண்மையாக இருக்க விரும்புகிறேன் அதேசமயம் நான் கீழே விழும் போது யார் தங்களுடைய முகத்தில் சிரிப்பை காட்டுகிறார்களோ அவர்களை ஒருபோதும் நான் மறக்க மாட்டேன்.. யாரும் திட்டமிட்டு கீழே விழுவது இல்லை.. இயற்கையால் அது நடக்கிறது. அதேபோன்று இயற்கையே எனக்கு ஆதரவளித்து என்னை பாதுகாக்கும்” என்று கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!