
பாலியல் புகார் பின்னணியில் கீது மோகன்தாஸ் : நிவின்பாலி பட இயக்குனர் குற்றச்சாட்டு
இந்த நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த இயக்குனர் லிஜு கிருஷ்ணா தன்மீதான புகாரின் பின்னணியில் நடிகையும் இயக்குனருமான கீது மோகன்தாஸ் செயல்படுவதாக பரபரப்பாக குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “என் மீதான பாலியல் புகார் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. இதன் பின்னணியில் நடிகையும் இயக்குனருமான கீது மோகன்தாஸ் செயல்பட்டு வருகிறார். சினிமா பெண்கள் நல அமைப்பு என்கிற பெயரில் எனக்கு அவர் மனரீதியான டார்ச்சர் செய்து வருவதோடு மிரட்டவும் செய்கிறார். அதற்கு காரணம் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நிவின்பாலியை இந்த படத்தில் நடிப்பதற்காக கதைசொல்லி ஒப்பந்தம் செய்த பின்னர், இந்த கதை குறித்து கீது மோகன்தாஸிடமும் மரியாதை ரீதியாக கலந்து பேசி வந்தேன்.
காரணம் நடிகர் நிவின்பாலி இயக்குனர் கீது மோகன்தாஸ் டைரக்ஷனில் மூத்தோன் என்கிற படத்திலும் அவரது கணவர் ராஜீவ் ரவி டைரக்ஷனில் துறமுகம் என்கிற படத்திலும் நடித்துள்ளதால் அவர்கள் இருவரது நெருங்கிய நட்பில் இருந்து வந்தார். அந்த மரியாதை காரணமாக கீது மோகன்தாஸிடமும் எனது கதை பற்றி பேசினேன். அதில் அவர் சில மாற்றங்கள் செய்யும்படி என்னிடம் கூறினார். ஆனால் நான் அதை மறுத்து விட்டேன்.
அதன்பிறகு தான் அவருக்குள் இருந்த ஈகோ காரணமாக எனக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தார். இந்த படத்தை நடக்கவிடாமல் செய்கிறேன் என கூறினார். ஆனால் இப்படி பாலியல் குற்றச்சாட்டு சுமத்தும் அளவிற்கு அவர் மோசமான நடவடிக்கையில் இறங்குவார் என நான் எதிர்பார்க்கவில்லை. இதன் பின்னணியில் கீது மோகன்தாஸ் இருக்கிறாரா என போலீசார் விசாரிக்க வேண்டும். என்னிடம் இருக்கும் தகவல்களை கொடுத்து போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்க நான் தயாராக இருக்கிறேன்.
இந்த படம் வெளியாகும்போது எனது பெயரை டைட்டிலில் இருந்து நீக்குவதற்கு கீது மோகன்தாஸ் தனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் படத்தின் ஹீரோ நிவின்பாலியும் தயாரிப்பாளர் சன்னி வெயினும் என்மீது வைத்த நம்பிக்கை காரணமாக அதற்கு உடன்படவில்லை. அவர்களுக்கு இந்த சமயத்தில் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார் லிஜு கிருஷ்ணா.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!