
தயாரித்து வரும் 4 படங்களை ஓடிடி-க்குக் கொடுத்த சூர்யா
பல படங்கள் ஓடிடியில் வெளிவர உள்ள நிலையில் தயாரிப்பாளரும், நடிகருமான சூர்யா சற்று முன் வெளியிட்ட அறிவிப்பு திரையுலகினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தயாரித்து வரும் 4 படங்களையும் மாதம் ஒன்றாக அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சூர்யா, ரஜிஷா விஜயன், லிஜோமோள் ஜோஸ், பிரகாஷ்ராஜ் நடித்துள்ள "ஜெய் பீம்", சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, சூரி நடித்துள்ள "உடன்பிறப்பே", ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம் நடித்துள்ள "ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்", அருண் விஜய், அர்ணவ் விஜய், மகிமா நம்பியார் நடித்துள்ள "ஓ மை டாக்" ஆகிய இந்த நான்கு படங்களையும்தான் ஓடிடி தளங்களில் வெளியிட உள்ளார்கள்.
செப்டம்பர் மாதம் "ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்", அக்டோபர் மாதம் "உடன்பிறப்பே,", நவம்பர் மாதம் "ஜெய் பீம்", டிசம்பர் மாதம் "ஓ மை டாக்" ஆகியவை வெளியாக உள்ளன.
கடந்த வருடம் கொரோனா முதல் அலையின் போது, தியேட்டர்காரர்களின் பலத்த எதிர்ப்புக்கிடையிலும், சூர்யா தயாரித்து ஜோதிகா நடித்த "பொன்மகள் வந்தாள்" படம் அமேசான் ஓடிடி தளத்தில் நேரடி வெளியீட்டை ஆரம்பித்து வைத்தது. அதன்பின் சூர்யா தயாரித்து நடித்த "சூரரைப் போற்று" படத்தையும் அதே ஓடிடி நிறுவனத்திற்கே கொடுத்தார். தற்போது தனது நான்கு தயாரிப்புகளையும் கொடுத்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!