
பன்ஞ் டயலாக் பேசும் ஹீரோக்கள், ஒளிப்பதிவு சட்ட திருத்ததிற்கு எதிராக திரள வேண்டும்: அமீர் கோரிக்கை
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நம் தேசத்தின் பன்முகத் தன்மையை மாற்றத் துடிக்கும் இப்போதைய அரசு கடந்த 7 ஆண்டுகளாக கொஞ்சம், கொஞ்சமாக அதற்கான வேலைகளை மிகுந்த திட்டமிடலோடு செய்து வருகிறது. தமிழர்களின் போராட்ட வரலாற்றைத் திரித்துச் சொல்லும் பேமிலி மேன்2 போன்றவை வெளிவர அனுமதிக்கும் இச்சூழலில், இனிவரும் காலங்களில் இந்தியத் திரைப்படங்களின் மூலமாக நாட்டின் உண்மைத் தன்மையையும், மக்களின் எண்ண ஓட்டங்களையும் இந்தியத் திரைப்படப் படைப்பாளிகள் பதிவு செய்துவிடக்கூடாது என்கின்ற சர்வாதிகார நோக்கத்தோடு ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021ஐ தற்போது கொண்டு வந்திருக்கிறது என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.
இப்புதிய சட்டத்திருத்த மசோதாவின் சரத்துகளில், முக்கியமாக மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுவினரால் வழங்கப்பட்ட சான்றிதழை, அரசு நினைத்தால் ரத்து செய்யலாம் என்ற திருத்தம் ஆளும் பா.ஜ.க., அரசின் சர்வாதிகாரத் தன்மையை மிகத் தெளிவாக நமக்குக் காட்டுகிறது. கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021ஐ படத்தில் பன்ஞ் டயலாக் பேசி வீரம் காட்டும் ஹீரோக்கள் உள்பட அனைவரும் ஒன்றாக இணைந்து நின்று எதிர்க்க வேண்டியது மிக மிக அவசியமாகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!