
தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி : திரையுலகினர் நன்றி
தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் முரளி வெளியிட்ட அறிக்கை : இன்று திரையுலகில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையிலிருந்து தொழில் பாதுகாப்பு அளித்து தக்க தருணத்தில் தியேட்டர்களில் 50 சதவீதத்திலிருந்து 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்த முதல்வர் பழனிசாமி, அமைச்சர் கடம்பூர் ராஜுவிற்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ் திரையுலகம் சார்பிலும் எங்களது கோடானு கோடி நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் டுவிட்டரில், ""திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து தமிழ் சினிமா மீண்டும் சிறப்பாக இயங்கிட வழிவகுத்த தமிழக அரசிற்கு நன்றி. பொங்கலுக்கு வரும் மாஸ்டர், ஈஸ்வரன் இரண்டு படங்களும் பெரும் வெற்றி அடைய வாழ்த்துகள்"" என பதிவிட்டுள்ளார்.
ராதிகா
நடிகை ராதிகா சரத்குமார் டுவிட்டரில், "திரையரங்குகளுக்கு 100 சதவித அனுமதி என்பதைப் பார்க்க அற்புதமாக இருக்கிறது. முதல்வர், அமைச்சருக்கு நன்றி"" என பதிவிட்டுள்ளார்.
பாரதிராஜா
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பாரதிராஜா வெளியிட்ட அறிக்கை : 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட இந்த பொங்கல் முதல் அனுமதி அளித்ததற்கு தமிழக முதல்வருக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் எங்களின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அனுமதிக்கு உறுதுணையாக இருந்த அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களுக்கும் எங்கள் நன்றிகள்.
100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கும் போது, திரையரங்குகளும், பார்வையாளர்களும், தமிழக அரசு கொடுத்துள்ள அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் (SoPs) கருத்தில் கொண்டு செயல்படவும் வேண்டுகிறோம். திரைப்படம் பார்க்க வரும் அனைவரின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொல்லுக்கு ஏற்ப, இந்த பொங்கல் முதல், தமிழ் சினிமா மீண்டும் வீறு கொண்டு செயல்பட அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம் என தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் டுவிட்டரில், ""இந்தப் பொங்கலிலிருந்து தமிழ்த் திரைத்துறை மீண்டும் உயிர்த்தெழும்"" என பகிர்ந்துள்ளார்.
தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு டுவிட்டரில், ""இது திரையுலகுக்கு மகிழ்ச்சியான புத்தாண்டு. நன்றி"" எனதெரிவித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!