
விசித்திரமான நோயால் அவதிப்படும் விஷ்ணு விஷால்
நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள "கட்டா குஸ்தி 2" படம் ஜூலை 3ம் தேதியன்று திரைக்கு வருகிறது. இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: முதலில், உங்கள் அன்புக்கும் அக்கறைக்கும் மனமார்ந்த நன்றி. சமீபத்திய என்னுடைய போஸ்ட் அனைத்திலும் நீங்கள் சொன்ன அத்தனை கமெண்ட்ஸ்களையும் நான் பார்த்தேன். அது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தது. அதனால் இந்த விஷயத்தை உங்களுடன் நேரடியாக பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
சமீப காலமாக என் முகம் சோர்வாக இருப்பது போல இருப்பதை பலர் கவனித்திருக்கிறீர்கள். அதற்குக் காரணம், கடந்த 3-4 ஆண்டுகளாக நான் ஒரு Autoimmune நோயால் பாதிக்கப்பட்டு வருகிறேன். அதற்காக மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை இடையிடையே எடுத்துக்கொண்டு வருகிறேன். அந்த மருந்துகளின் பக்கவிளைவு தான் அந்த சோர்வு ஆனால் தற்போது நான் மேற்கொண்டு வரும் இந்த சிகிச்சை என் உடல்நலத்திற்கு மிகவும் அவசியமானது.
அதே சமயம், நீங்கள் காட்டும் அன்பும் ஆதரவும், நான் நம்பிக்கையுடன் செய்து வரும் வேலையும், மேலும் "கட்டா குஸ்தி 2" படத்திற்காக இரவு பகலாக உழைத்த ஒவ்வொருவரிடமும் எனக்குள்ள பொறுப்புணர்வும் என்னை தொடர்ந்து முன்னேறச் செய்கின்றன. அதனால்தான் உடல்நிலை சவால்கள் இருந்தபோதிலும், படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறேன்.
என் உடல்நிலை விரைவில் குணமாகிவிடும். நீங்கள் காட்டிய அக்கறை, என்னை இன்னும் சிறப்பாக என் உடல்நலத்தை கவனித்துக்கொள்ள ஊக்குவித்துள்ளது. ஒவ்வொரு கமெண்ட்ஸ் மற்றும் கருத்துக்கும், ஒவ்வொரு ஆதரவுக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.
இப்போது கட்டாகுஸ்தி படத்தின் புரமோஷன் வேலைகளில் இறுதிக்கட்ட பணிகளில் நாங்கள் இருக்கிறோம். மிகுந்த நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் இருக்கிறேன். வரும் ஜூலை 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் "கட்டா குஸ்தி 2" படத்தை நீங்கள் அனைவரும் கண்டுகளித்திட காத்திருக்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
பொதுவாக, நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் என்பது வெளியிலிருந்து வரும் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளிடம் இருந்து நம்மைப் பாதுகாக்கும் ஒரு ராணுவம் போலச் செயல்படும். ஆனால், இந்த ஆட்டோஇம்யூன் நோய் உள்ளவர்களுக்கு, நோய் எதிர்ப்பு மண்டலத்தால் எது வெளியிலிருந்து வந்த கிருமி, எது உடலின் சொந்த நல்ல செல்கள் என்று பிரித்தறிய முடியாமல் குழப்பம் ஏற்படும். இதனால், அது நம் உடலின் ஆரோக்கியமான திசுக்கள், உறுப்புகள் அல்லது செல்களை "எதிரி" என்று தவறாக நினைத்து, அவற்றின் மீதே தாக்குதல் நடத்தத் தொடங்கும் என்கின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!