
கார்த்தியை கை விட்ட வா வாத்தியார்
அடுத்து வந்த "சகுனி" படத்தில் வந்த சறுக்கல் "அலெக்ஸ் பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி" என தொடர்ந்து தோல்விகளைத் தந்தது. அந்தத் தோல்விகளிலிருந்து "மெட்ராஸ்" படம் அவரைக் காப்பாற்றியது. தொடர்ந்து "கொம்பன், தோழா/ஊபிரி (தெலுங்கு) என அடுத்தடுத்த வெற்றிகளைக் கொடுத்தாலும் "காஷ்மோரா, காற்று வெளியிடை" என அடுத்தடுத்த தோல்விகளை மீண்டும் தந்தது.
இருந்தாலும் "தீரன் அதிகாரம் ஒன்று" மூலம் மீண்டு எழுந்து அடுத்து "கடைக்குட்டி சிங்கம்" மூலம் அனைத்து ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார். இருந்தாலும் தேடிப் போய் "தேவ்" படத்தில் நடித்து அதிர்ச்சியைக் கொடுத்தார். ஆனாலும் "கைதி" படம் அவருக்கு மிகவும் அழுத்தமாகக் கை கொடுத்து காப்பாற்றித் தூக்கியது.
தொடர்ந்து "தம்பி, சுல்தான்," படங்கள் வந்தன. தம்பி தோல்வியை தந்தது. "சுல்தான்" சராசரியான வெற்றியைப் பெற்றது. பின்னர் "பொன்னியின் செல்வன் 1" பெரிதும் மாற்றியது. இடையில் வந்த "விருமன்" சுமாரான வரவேற்பை பெற்றது. "சர்தார்" சத்தான வெற்றியைத் தந்தாலும் அடுத்து "பொன்னியின் செல்வன் 2" முதல் பாகத்தைப் போல மாற்றத்தைத் தராமல் இறக்கத்தைத் தான் தந்தது.
முந்தைய தோல்விகள் கூட பரவாயில்லை, சமாளித்து விடலாம் என்று பார்த்தால் "ஜப்பான்" என்ற அணுகுண்டு விழுந்த நாட்டின் பெயர் கொண்ட படம், கார்த்தியின் திரையுலகப் பயணத்திலும் ஒரு அணுகுண்டை போட்டுவிட்டுப் போனது. அதுவரையில் அவர் நடித்து வந்த படங்களில் மோசமான வரவேற்பையும், வசூலையும் பெற்ற ஒரு படமாக அமைந்தது.
அதிலிருந்து மீண்டும் மீண்டு "மெய்யழகன்" மூலம் மெய் ஆக அழகாகப் பேச வைத்தார். அடுத்தும் அவருக்கு ஒரு அழகான வெற்றிப் படம் அமைந்துவிடும் என்று பார்த்தால் "ஜப்பான்" படத்தை விடவும் ஒரு மோசமான படமாக "வா வாத்தியார்" படம் வந்தது. கார்த்தி நடித்து இதுவரையில் வந்த படங்களில் மோசமான வரவேற்பு, மோசமான வசூல், மோசமான பெயர் என அவரை கலங்கடித்து கைவிட்டுள்ளது.
வெளியான நாள் முதலே படத்திற்கு விமர்சனங்களும், வசூலும் இல்லை. ஒரு வாரம் ஆன நிலையில் இன்றே இப்படம் கடைசி என ஒட்டுமொத்தமாக தியேட்டர்களை விட்டு தூக்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் எப்போதுமே ஒரு சென்டிமென்ட் உண்டு. பட வெளியீட்டை அறிவித்துவிட்டு, அடுத்தடுத்து அதன் தேதிகளை மாற்றும் படங்கள் வரவேற்பைப் பெறுவதில்லை.
கடந்த 2025ம் ஆண்டு பொங்கலுக்கே வெளியாக வேண்டிய படம் "வா வாத்தியார்". அதன்பின் வெளியீடு பற்றிய சத்தமே இல்லை. கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி படத்தை வெளியிடுவதாக அறிவித்தார்கள். பழைய கடன் பிரச்சனையில் படத்தை டிசம்பர் 12க்குத் தள்ளி வத்து நீதிமன்றத் தடையால் அப்போதும் வெளியிட முடியாமல் போனது.
இருந்த கடன்கள் அனைத்தையும் செலுத்திவிட்டு பொங்கலுக்கு படத்தை அறிவித்து அதன்படி வெளியிடவும் செய்தார்கள். ஆனால், இப்படி ஒரு நிலை படத்திற்கு வரும் என அவர்களே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
"சூது கவ்வும், காதலும் கடந்து போகும்" படங்களை இயக்கிய நலன் குமாரசாமியா இந்தப் படத்தை இயக்கினார் என்ற கேள்வி பலமாக எழுந்தது. 10 வருட இடைவெளிக்குப் பிறகு அவரது இயக்கத்தில் வந்த படம். இந்தக் கதை மீது எந்த விதத்தில் நம்பிக்கை வைத்து கார்த்தி நடித்தார் என்று ரசிகர்களே கேட்டார்கள்.
நாம் விசாரித்த வரையில் கார்த்தி அடுத்து நடித்து, இந்த வருடத்தில் வர உள்ள "சர்தார் 2, மார்ஷல்" ஆகிய படங்கள் அவருக்கு நிச்சயம் கை கொடுக்கும் படங்களாக இருக்கும் என்கிறார்கள். வெற்றி, தோல்வி என அடுத்தடுத்து வரும் சென்டிமென்ட்டை கார்த்தி கவனிப்பது அவரது திரையுலகப் பயணத்திற்கு முக்கியமானது. கதைத் தேர்வுகளில் கவனம் செலுத்துங்கள் கார்த்தி….




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!