
பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம்
பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் படமான ஒரே தமிழ் படம் "மனிதனின் மறுபக்கம்". இது சிவகுமாரின் 150வது படம். சிவகுமார் ஒரு ஓவியர் அவர் தனது மனைவி ராதாவை கொன்றுதாக சிறை சென்று விடுவார். பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். ஆனால் கொலை செய்ததற்கான காரணத்தை மட்டும் சொல்ல மாட்டார்.
ராதாவின் தங்கையும், பத்திரிகையாளருமான ஜெயஸ்ரீ பெங்களூர் சிறையில் சிவகுமாரை சந்தித்து அவர் ஏன் கொலை செய்தார் என்ற கட்டுரையை வெளியிடுவார். சிவகுமார் கொலைக்கான காரணத்தை சொல்லாவிட்டாலும், சிவகுமார் ஒரு ஓவியர் அவர் தனது மனைவியை நிர்வாணமாக வரைய விரும்பினார், அதற்கு மனைவி ஒத்துக் கொள்ளததால் அவரை கொன்றார் என்று இவராகவே ஒரு காரணத்தை வெளியிடுவார்.
இதனால் உண்மை காரணத்தை சொல்வதற்காக சிறையில் இருந்து தப்பும் சிவகுமார் அடுத்து என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை. கே.ரங்கராஜ் இயக்கிய இந்தப் படத்தில் சிவகுமாருடன் ராதா, ஜெயஸ்ரீ, ஜெய் கணேஷ் உள்பட பலர் நடித்திருந்தார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.ஜி.தியாகராஜன் தயாரித்திருந்தார். இளையராஜா இசை அமைத்திருந்தார்.
இந்த படத்தின் தலைப்பு ரஜினி பட தலைப்பு. ரஜினியை வைத்து ஒரு மாஸ் ஆக்ஷன் படம் எடுக்கும் நோக்கத்தில் கே.பாலச்சந்தர் "மனிதனின் மறுபக்கம்" தலைப்பை பதிவு செய்திருந்தார். ஆனால் அந்த படம் ஆரம்பிக்காததால் சத்யஜோதி பிலிம்சுக்கு கொடுத்தார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!