
திரையுலகில் 22 ஆண்டுகள்: நயன்தாரா நெகிழ்ச்சி
தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகையாக இருப்பவர் நயன்தாரா. கடந்த பல வருடங்களாகவே அவருடைய இடத்தை வேறு யாராலும் அசைத்துப் பார்க்க முடியவில்லை. படம் ஓடினாலும், ஓடாவிட்டாலும் அவருக்கென வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன.
2003ல் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் வெளிவந்த "மனசினக்கரே" என்ற மலையாளப் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். 2005ல் ஹரி இயக்கத்தில் வெளிவந்த "ஐயா" படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.
சினிமாவுக்காக கேமரா முன் நின்று 22 வருடங்கள் ஆகிறது என்பது குறித்து நயன்தாரா பதிவிட்டுள்ளார். “திரைப்படங்கள் என் வாழ்க்கையின் காதலாக மாறும் என்று தெரியாமல், கேமரா முன்பு நான் முதல் முறையாக நின்று 22 ஆண்டுகள் ஆகின்றன. ஒவ்வொரு பிரேமும், ஒவ்வொரு ஷாட்டும், ஒவ்வொரு அமைதியும்... என்னை வடிவமைத்தது, குணப்படுத்தியது, நான் யார் என்று உருவாக்கியது. என்றென்றும் நன்றியுடன்,” என்று நெகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழில் "மூக்குத்தி அம்மன் 2, ஹாய்" ஆகிய படங்களிலும் தெலுங்கில் "மன ஷங்கர வரபிரசாத் காரு" படத்திலும், கன்னடத்தில் "டாக்சிக்" படத்திலும் நடித்து வருகிறார் நயன்தாரா.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!