
ஷங்கரின் கனவுப்படம் வேள்பாரி : தயாரிக்கப் போவது யார் ?
மதுரை எம்.பி.யும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் எழுதிய "வேள்பாரி" சரித்திர நாவலின் விழா ஒன்று நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் ஷங்கர் "முதல்ல என்னுடைய கனவுப்படமாக இருந்தது "எந்திரன்". இப்போது என்னுடைய கனவுப் படம் "வேள்பாரி",” என்று பேசியிருந்தார்.
"வேள்பாரி" நாவலைப் படமாக்கும் வேலைகளை ஷங்கர் எப்போதோ ஆரம்பித்துவிட்டார். அதற்கான திரைக்கதை எழுதும் பணியும் முடிந்துவிட்டது என்று ஏற்கெனவே சில பேட்டிகளில் பேசியிருந்தார்.
"இந்தியன் 3" படத்தின் நிலை என்னவென்பது தெரியாத நிலையில் "வேள்பாரி" படத்திற்கான வேலைகளில் ஷங்கர் இறங்கியுள்ளார் என்பது தெரிகிறது. இந்தப் படம் "கேம் ஆப் த்ரோன்ஸ், அவதார்" போன்ற ஹாலிவுட் படங்களுக்கு இணையாக எடுக்க முடியும் என்றும் பேசியிருந்தார். அப்படிப்பட்ட படங்களாக எடுக்க வேண்டும் என்றால் சில 100 கோடிகள் தேவைப்படும். இரண்டு, மூன்று பாகப் படங்கள் என்றால் 1000 கோடியைக் கடந்தும் தேவைப்படும்.
ஷங்கரின் முன்னாள் உதவியாளரும், இன்றைய முன்னணி இயக்குனருமான அட்லி தற்போது அல்லு அர்ஜுன் நடிக்க, இயக்கி வரும் படத்தின் பட்ஜெட் 800 கோடி என்கிறார்கள். அதைவிடவும் அதிகமான பட்ஜெட் "வேள்பாரி" படத்திற்குத் தேவைப்படலாம். அந்த அளவிற்கு அந்த நாவலில் உள்ள காட்சிகள் பரந்து விரிந்து பிரம்மாண்டமாக இருக்கிறது.
ஷங்கரின் கனவுப் படமான "வேள்பாரி"யைத் தயாரிக்க யார் முன் வருவார்கள் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்களும் பேச ஆரம்பித்துள்ளார்கள். தமிழ் சினிமாவின் கனவுப் படமாகவும் அமைந்து 1000 கோடிக்கும் அதிகமான வசூலை தமிழ் சினிமா இன்னும் பெறாத ஏக்கத்தை பூர்த்தி செய்ய யார் முன் வரப் போகிறார்கள்?.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!