
முத்த மழை வீடியோ வெளியான பின்பும் சர்ச்சை
"தக் லைப்" படத்தில் ஏஆர் ரகுமான் இசையில் சிவா ஆனந்த் எழுதிய தீ பாடிய "முத்த மழை" பாடல் படத்தில் இடம் பெறவில்லை. அந்தப் பாடலின் வீடியோவை நேற்று வெளியிட்டிருந்தார்கள். திரிஷா நடனமாடிய அந்தப் பாடல் இப்போது மீண்டும் சர்ச்சையை ஆரம்பித்து வைத்துள்ளது.
"தக் லைப்" படத்திற்கு இவ்வளவு டிரோல்களும், மீம்ஸ்களும் படம் வெளியான பின்பு வந்ததற்கு, சில தேவையற்ற சர்ச்சைகள் பட வெளியீட்டிற்கு முன்பு உருவானதே காரணம் என்றும் கோலிவுட்டில் சிலர் சொல்கிறார்கள்.
இசை வெளியீட்டின் போது, "முத்த மழை" பாடலை மேடையில் பிரபல பாடகி சின்மயி பாடினார். ஒரிஜனலாகப் பாடிய தீ பாடியதை விடவும் சின்மயி சிறப்பாகப் பாடினார் என சமூக வலைதளங்களில் ஒரு சர்ச்சை எழுந்தது. அடுத்து கமல்ஹாசன் தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம் என்று பேசியது கர்நாடகாவில் படத்தை வெளியிடாமல் தடை செய்ய வைத்தது. படத்திற்கான பேட்டி ஒன்றில் "தக் லைப்" பார்த்த பிறகு "நாயகன்" படத்தையே மறந்துவிடுவீர்கள் என "ஓவர் கான்பிடன்ட்"டில் சொன்னது என படக்குழுவினரே சில சர்ச்சைகளை உருவாக்கினார்கள்.
இப்போது "முத்த மழை" பாடல் வெளிவந்த பின்பு, இவ்வளவு மோசமாக பாடலைப் படமாக்கி இருக்கிறாரே மணிரத்னம் என சிலர் கமெண்ட் செய்துள்ளார்கள். ஒரே ஒரு மேடையில் முழு பாடலை எடுத்துள்ளது பலருக்கும் பிடிக்கவில்லை. தீபிகா படுகோனே நடனமாடிய "பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத்" படப் பாடல்களை "ஷேர்" செய்து அவற்றுடன் திரிஷாவின் "முத்த மழை" பாடலை ஒப்பிட்டு கமெண்ட் செய்தும், சிலர் தீ பாடிய குரலுக்குப் பதிலாக சின்மயி பாடிய குரலை சேர்த்து எடிட் செய்து ஷேர் செய்துள்ளார்கள். தீ குரல் திரிஷாவுக்குப் பொருத்தமாக இல்லை, திரிஷா பாடலுக்கேற்றபடி நடிக்கவே இல்லை என்றும் விமர்சிக்கிறார்கள்.
"மழை நின்றும் தூவானம் விடவில்லை" என்று சொல்வார்கள். "தக் லைப்" படம் தோல்வியைத் தழுவிய நிலையில், "முத்த மழை" பாடலில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!