
பிளாஷ்பேக்: பெண் உளவாளியாக நடித்த முதல் நடிகை
இன்றைக்கு ஸ்பை திரில்லர் படங்களுக்கு தனி மதிப்பு உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவரும் உளவாளியாக நடித்துவிட்டார்கள். நயன்தாரா, சமந்தா, பிரியங்கா சோப்ரா, கரீனா கபூர் தீபிகா படுகோன் உள்ளிட்ட நடிகைகளும் உளவாளிகளாக நடித்து விட்டார்கள்.
ஆனால் முதன் முதலாக பெண் உளவாளியாக 80 ஆண்டுகளுக்கு முன்பே நடித்தவர் கே.எல்.வி.வசந்தா. அவருடன் மற்றொரு உளவாளியாக நடித்தவர் காமெடி நடிகை டி.ஏ.மதுரம். "பர்மா ராணி" என்ற வார் படத்தில் இருவரும் அப்படி நடித்தார்கள்.
கதைப்படி இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்தபோது இந்தியாவை ஆண்ட பிரிட்டீஷ் அரசாங்கத்தின் உளவாளிகளாக பர்மாவில் பணியாற்றுகிறார்கள் வசந்தாவும், மதுரமும். ஜப்பான் நாடு இந்தியாவை தாக்குவதை கண்காணித்து அதை அறிவிக்கும் பணிக்காக அனுப்பப்பட்டவர்கள். அந்த பணியில் இருக்கும்போது இந்தியாவில் இருந்து பர்மாவுக்கு செல்லும் 3 விமானிகள் ஜப்பானிய படையிடம் மாட்டிக் கொள்கிறார்கள். அவர்களை அதிரடி உளவாளிகளான கே.எல்.வி.வசந்தாவும், மதுரமும் எப்படி காப்பாற்றி இந்தியா அனுப்பி வைக்கிறார்கள் என்பதுதான் கதை.
இன்றைக்கு வெளிவரும் உளவாளிகள் படத்தின் கதையெல்லாம் தூக்கி சாப்பிடுகிற மாதிரியான பக்கா ஆக்ஷன் படமாக இது உருவானது. இந்த படத்தை மார்டன் தியேட்டர்ஸ் சார்பில் டி.ஆர் சுந்தரம் தயாரித்து இயக்கினார். ஹொன்னப்ப பாகவதர், செருகளத்தூர் சாமா, டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன், காளி என்.ரத்னம் உள்பட பலர் நடித்தார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!