
பிளாஷ்பேக்: பாலைவனச்சோலை பாடல்களுக்கு தடை
இந்த படத்தை கிட்டத்தட்ட "ஒரு தலை ராகம்" போன்றே இயக்கினார்கள் ராபர்ட் - ராஜசேகர். அது காதல் கதை, இது நட்பை பற்றிய கதை. நான்கு இளைஞர்கள் ஒரு இளம் பெண் என்று கதை சொல்ல ஆரம்பித்தாலே தயாரிப்பாளர்கள் தலைதெறிக்க ஓடிய காலத்தில் வடிவேலு என்ற ஒரு சிறு தயாரிப்பாளர் துணிச்சலுடன் தயாரித்த படம். சுஹாசினி, சந்திரசேகர், தியாகு, ராஜீவ், ஜனகராஜ் என பின்னாளில் புகழ்பெற்ற பல கலைஞர்களை அடையாளம் காட்டிய படம்.
இந்த படத்திற்கு சங்கர்-கணேஷ் இசை அமைத்தனர். அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. ஆனால் இதில் இரண்டு பாடல்களை வானொலியில் ஒலிபரப்ப தடை செய்யப்பட்ட கதை பலரும் அறியாதது. படத்தில் இடம்பெற்ற "இது எங்களின் கதை உங்களின் கதை" பாடலில் வரும் "இருப்பதை எடுப்பதும், பிரிப்பதும் கொடுப்பதும் புதிய வரைமுறைதான்" என்ற வரிகள் கம்யூனிசம் பேசி வன்முறையை தூண்டுவதாக இருப்பதாக கூறி பாடலுக்கு தடை விதிக்கப்பட்டது.
இன்னொரு பாடலாக "பவுர்ணமி நேரம் பாவை ஒருத்தி" என்ற பாடலில் "பொண்ணு ஊருக்கு புதுசோ என்றேன், காலில் உள்ளது புதுசு" என்றாள் என்ற வரிக்காக தடை செய்யப்பட்டது. இளைஞர்களின் மனதை இந்த பாடல் கெடுப்பதாக காரணம் கூறப்பட்டது. அப்போது சமூக வலைத்தளங்களோ தொலைக்காட்சியோ இல்லாததால் வானொலியே முக்கியமான மீடியாவாக இருந்தது. என்றாலும் மக்கள் இந்த இரண்டு பாடலையும் கொண்டாடினார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!