
பிளாஷ்பேக் : விசுவை சினிமா நடிகராக்கிய எஸ்.பி.முத்துராமன்
ஒரே வீட்டிற்குள் வசிக்கும் தனித்தனி குடும்பங்களை பற்றிய கதை. அதை விசு காமெடி நாடகமாக நடத்தி வந்தார். அந்த நாடகத்தை ஒரு நாள் எஸ்.பி.முத்துராமன் பார்த்தார், அதை உடனே சினிமாவாக்க விரும்பினார். யார் கேட்டும் கதையை கொடுக்காத விசு, எஸ்.பி.முத்துராமன் கேட்டதும் கொடுத்தார். நாடகத்தில் தான் நடித்த கேரக்டரில் சிவகுமாரை நடிக்க வையுங்கள் என்று ஆலோசனையும் சொன்னார்.
அதை மறுத்த எஸ்.பி.முத்துராமன் நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்று கூறினார். "எனது வசன உச்சரிப்பு நாடக பாணியில் இருக்கும் அது சினிமாவுக்கு செட்டாகாது. சினிமாவுக்கு ஏற்ற மாதிரி எனக்கு இயல்பாக பேச வராது" என்று மறுத்தார். ஆனாலும் முத்துராமன் விடவில்லை. "நீங்கள் நாடத்தில் பேசுவது போலவே பேசுங்கள் மற்றதை நான் பார்த்து கொள்கிறேன்" என்று கூறி அவரையே நடிக்க வைத்தார். விசுவின் நாடக குழுவில் உள்ள அனைவருக்கும் படத்திலும் நடிக்க வாய்ப்பளித்தார். நாயகி சுஹாசினி, சுமலதா, நாயகன் பிரதாப் தவிர மற்ற அனைவரும் பெரும்பாலும் நாடக கலைஞர்கள்.
கற்பகம் ஸ்டூடியோவில் இருந்த ஒரு வீட்டை சற்று மாற்றி அமைத்து மொத்த படத்தையும் அங்கேயே எடுத்தார் எஸ்.பி.முத்துராமன். படத்தை 28 நாளில் எடுத்து முடித்தார். படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது. அதன் பிறகு விசு முழுநேர நடிகர் ஆனார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!