
பிளாஷ்பேக்: முதல் முறையாக தடை செய்யப்பட்ட படம்
கல்கி எழுதிய "தியாக பூமி" நாவலைத் தழுவி அதே பெயரில் இந்தப் படத்தை கே சுப்ரமணியம் இயக்க, எஸ்எஸ் வாசன் படத்தை வெளியிட்டார். இந்த படத்தின் நாயகன் சாம்பு சாஸ்திரியாக இசை அமைப்பாளர் பாபநாசம் சிவனும், அவரது மகள் சாவித்ரியாக எஸ்.டி.சுப்புலட்சுமியும் நடித்தனர். சாவித்ரியை திருமணம் செய்யும் ஸ்ரீதரன் என்ற வேடத்தில் கே.ஜே.மகாதேவன் நடித்தார். பாபநாசம் சிவன் நாயகனாக நடித்த ஒரே படமும் இதுதான்.
ஆங்கிலேயர் ஆட்சி நடந்து கொண்டிருந்தாலும் அப்போதைய சென்னை மாகாண முதல்வராக ராஜாஜி இருந்தார். அதற்கு முன்னாள் நீதி கட்சி ஆட்சியின்போது ஆங்கிலேயர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்த தணிக்கை விதிமுறைகளை தளர்த்தினார். இந்த காலகட்டத்தில் வெளிவந்த "தியாகபூமி" எந்த பிரச்சினையும் இன்றி வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. 22 வாரங்கள் ஓடி வசூலை குவித்தது. இந்திய சுதந்திரம் பற்றியும், சுதந்திர போராட்டம் பற்றியும் படம் வெளிப்படையாக பேசியது.
1940ல் நிலைமை மாறியது. 1940ல் ராஜாஜி பதவி பறிக்கப்பட்டு கவர்னர் ஆட்சி ஏற்பட்டது. ஆங்கில கவர்னர் படம் காங்கிரஸுக்கு ஆதரவாக இருப்பதாக கருதி படத்துக்கு தடை விதித்தார். இந்தத் தடை அமலுக்கு வரும்வரை சென்னை கெயிட்டி திரையரங்கில் இலவசமாக தியாக பூமியை ஜனங்கள் பார்க்கலாம் என எஸ்எஸ் வாசன் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து மக்கள் கூட்டம் கூட்டமாக கெயிட்டி திரையரங்கை முற்றுகையிட்டனர். கடைசியில் திரையரங்குக்குள் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்ததோடு, படமும் முழுமையாக தடை செய்யப்பட்டது. இப்போது இந்தப் படத்தின் பிரதிகள் எதுவும் இல்லை. ஒரேயொரு பிரதி மட்டும் புனேயில் உள்ள திரைப்படக் கல்லூரியில் உள்ளதாக கூறப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!