
பிரபஞ்சத்துக்கே நான்தான் சூப்பர் ஸ்டார்: மிர்ச்சி சிவா கலகல
படத்தின் அறிமுக நிகழ்வு நடந்தது. இதில் நடிகர் மிர்ச்சி சிவா பேசியதாவது: தயாரிப்பாளர் சிவி குமார் சாரை அலுவலகத்தில் சந்தித்தபோது "சூது கவ்வும் 2" படத்தை உருவாக்கவிருக்கிறோம் என்றார். அதை சொன்னவுடன் எனக்குள் சூது கவ்வும் நல்ல படமாச்சே, அதை ஏன் இரண்டாம் பாகம் எடுக்கிறார்கள் என்று தோன்றியது. அதாவது அந்த நல்ல படத்தை ஏன் மீண்டும் எடுக்கிறார்கள் என்பது தான் என்னுடைய கேள்வியாக இருந்தது.
அப்போது இயக்குநர் அர்ஜுன் இந்த திரைப்படம் சூது கவ்வும் திரைப்படத்தின் ப்ரீகுவலாக உருவாகிறது. அதன் பிறகு தற்போதைய படத்துடன் தொடர்பு ஏற்படும் என்றார். அத்துடன் அதற்காக அவர் சொன்ன திரைக்கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த கதைக்குள் நான் வருவது, கருணாகரனை சந்திப்பது, என பல சுவாரசியமான திருப்பங்கள் இருந்தன. அதன் பிறகு இப்படத்தின் பணிகளை தொடங்கினோம்.
இந்த திரைப்படத்தின் திரைக்கதையை மூன்று வருடமாக எழுதினார்கள் என்றார்கள். அதெல்லாம் கிடையாது. டைட்டானிக், அவதார் போல் எடுக்கவில்லை. இரண்டு வருடம் கோவிட். அதனால் ஒருவரை ஒருவர் சந்திக்கவில்லை. இதுதான் உண்மை. மூன்று வருடம் திரைக்கதையை எழுதினால் அவதார், டைட்டானிக் போன்று படம் எடுக்க வேண்டும். அதுபோல் இல்லை இந்த திரைப்படம். ஆனால் இந்த படத்தின் கதை சுருக்கம் நலன் குமாரசாமியுடையது. அது அற்புதமாக இருந்தது. அவருடைய சூது கவ்வும் தர்மம் வெல்லும் படத்திற்காகவும் காத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவரிடம் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கே பிரச்சினை நடக்கும்போது அகில உலக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை வைத்துள்ளீர்களே என்று செய்தியாளர்கள் கேட்டபோது ""சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் மட்டும்தான். ஆனால் அகில உலக சூப்பர் ஸ்டார் பட்டம் இந்தியா, யுனிவர்ஸ், பிளாக் ஹோல் கடந்து சென்றுள்ளது. எனவே பிரபஞ்சத்துக்கே நான்தான் சூப்பர் ஸ்டார்” என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!