
பிளாஷ்பேக் : கமல்ஹாசனின் கலைச் சேவையில் மலர்ந்த கபிதா
இவரது “அரங்கேற்றம்” திரைப்படத்தின் மூலம்தான் அரங்கேறியது கமல்ஹாசனின் கலையுலக நாயகன் பயணம். தொடர்ந்து இயக்குநர் கே பாலசந்தரின் “சொல்லத்தான் நினைக்கிறேன்” திரைப்படத்தில் ஒரு எதிர்மறை நாயகன் வேடத்தில் நடித்த இவர், 1974ம் ஆண்டு மீண்டும் இயக்குநர் கே பாலசந்தரின் கைவண்ணத்தில் உருவான “அவள் ஒரு தொடர்கதை” என்ற திரைப்படத்தில் கோபால் என்ற கதாபாத்திரத்தில் ஒரு விகடகவியாக தோன்றி பார்வையாளர்களை வியக்க வைத்திருந்தார்.
இங்கு வெள்ளிவிழா கண்ட இத்திரைப்படம், வங்காள மொழியில் “கபிதா” என்ற பெயரில் 1977ம் ஆண்டு வெளிவந்தது. தமிழில் நடிகை சுஜாதா நடித்த கவிதா என்ற கதாபாத்திரத்தின் பெயரையே அங்கு படத்தின் பெயராக “கபிதா” என வைத்திருந்தனர். பரத் ஷம்ஷேர் ஜங் பகதூர் ராணா இயக்கிய இத்திரைப்படத்தில், நடிகை சுஜாதாவின் கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகை மாலா சின்ஹா நடித்திருக்க, தமிழில் கமல்ஹாசன் ஏற்று நடித்திருந்த அந்த விகடகவி கதாபாத்திரத்திற்கு கமல்ஹாசனையே தேர்வு செய்திருந்தனர் படக்குழுவினர்.
அங்கு விகடகவி கோபால் மேனனாக தோன்றி, தனது ஆகச் சிறந்த நடிப்பாற்றலால் தென்னிந்திய திரையுலகிற்கே பெருமை சேர்த்திருப்பார் கமல். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்திருக்கும் கமல்ஹாசன், “பேசும்படம்” என்ற மொழியே அல்லாத ஒற்றை மௌன திரைப்படத்தில் நடித்திருந்ததைப் போல், வங்காள மொழியிலும் இவர் நடித்திருந்த ஒற்றை திரைப்படமாகிப் போனதுதான் இந்த “கபிதா”.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!