
மணிரத்னம் - ரஜினிகாந்த் கூட்டணியா ? திடீரெனப் பரவும் தகவல்
"பொன்னியின் செல்வன் 2" படத்திற்குப் பிறகு மணிரத்னம், ரஜினிகாந்த் கூட்டணி இணைந்து ஒரு படத்தில் பணிபுரிவார்கள் என்று தகவல் வெளியானது. 1991ல் வெளிவந்த "தளபதி" படத்திற்குப் பிறகு அவர்கள் 30 வருடங்களுக்கும் மேலாக மீண்டும் இணைந்து பணிபுரியவேயில்லை.
"பொன்னியின் செல்வன்" இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்ட பின்புதான் அவர்கள் இருவரும் இணைந்து பணிபுரிவது பற்றிய தகவல் வெளிவந்தது. அப்போதே மணிரத்னம், ரஜினியை சந்தித்து கதை சொன்னதாகவும், அந்தக் கதை ரஜினிக்குப் பிடித்தது என்றும், அதை லைக்கா நிறுவனமே தயாரிக்கும் என்றும் சொன்னார்கள்.
ஆனால், நடந்தது வேறொன்று. மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணி 1986ல் வெளிவந்த "நாயகன்" படத்திற்குப் பிறகு மீண்டும் இணைய, "தக் லைப்" படம் ஆரம்பமானது. இடையில் என்ன நடந்தது என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் தெரியும்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான ரஜினி - மணி கூட்டணி பற்றிய தகவல் இப்போது மீண்டும் வெளிவந்துள்ளது. கோலிவுட்டில் விசாரித்தால் யாரோ இதை வேண்டுமென்றே பரப்பியுள்ளார்கள் என்று சொல்கிறார்கள். ரஜினியின் உடல்நிலை பற்றி சிலர் தவறான தகவல்களைப் பரப்புவதை மடை மாற்றவே இப்படி ரஜினி - மணி கூட்டணி என்று சொல்லி வருகிறார்களாம்.
தனக்குக் கதை சொல்லிவிட்டு, கமல்ஹாசன் பக்கம் போன மணிரத்னத்துடன் ரஜினி மீண்டும் இணைவாரா என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனாலும், அந்தக் கூட்டணி மீண்டும் இணைந்தால் நன்றாகத்தான் இருக்கும் என்பதும் ரசிகர்களின் "கமெண்ட்" ஆக உள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!