
டிவி நிகழ்ச்சிகளும், சினிமா நட்சத்திரங்களும்… வரவேற்பு பெறுவாரா விஜய் சேதுபதி?
எத்தனையோ டிவி நிகழ்ச்சிகளைப் பார்த்த ரசிகர்களுக்கு சில டிவி நிகழ்ச்சிகள் புதிய ரசனையைக் கொடுத்தன என்பதை மறுக்க முடியாது. அதற்கு முக்கியக் காரணமாக சினிமா நடிகர்கள் அந்த டிவி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதும் அமைந்தது.
2001ம் ஆண்டில் நடிகர் சரத்குமார் "கோடீஸ்வரன்" என்ற குவிஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். 2010ல் "ஹனிமூன் ஜோடிகள்" என்ற நிகழ்ச்சியிலும், 2018ல் "சொப்பன சுந்தரி" என்ற நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக இருந்தார் நடிகர் பிரசன்னா.
2012ம் ஆண்டில் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" என்ற நிகழ்ச்சியை முதல் சீசனை நடிகர் சூர்யா, இரண்டாவது சீசனை நடிகர் பிரகாஷ் ராஜ், மூன்றாவது சீசனை நடிகர் அரவிந்த்சாமி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
2018ம் ஆண்டு "எங்க வீட்டு மாப்பிள்ளை" என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார் நடிகர் ஆர்யா. அதே ஆண்டில் "நாம் ஒருவர்" என்ற நிகழ்ச்சியை நடிகர் விஷால் தொகுத்து வழங்கினார்.
2021ம் ஆண்டில் "சர்வைவர்" என்ற நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன், 2022ம் ஆண்டில் "பிக் பாஸ் அல்டிமேட்" என்ற ஓடிடி நிகழ்ச்சியை நடிகர் சிம்பு ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
நடிகை குஷ்பு 1999ல் ஒளிபரப்பான "ஜாக்பாட்" டிவி நிகழ்ச்சியிலும், 2013ல் நடிகை ரோஜா ‛லக்கா கிக்கா" என்ற டிவி நிகழ்ச்சியிலும், நடிகை சங்கீதா, 2013ல் ஒளிபரப்பான "நட்சத்திர ஜன்னல்" என்ற டிவி நிகழ்ச்சியிலும், நடிகை வரலட்சுமி சரத்குமார் 2018ல் "உன்னை அறிந்தால்" என்ற நிகழ்ச்சியிலும், நடிகை ராதிகா 2020ல் ஒளிபரப்பான ‛கோடீஸ்வரி" என்ற நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக இருந்துள்ளார்கள்.
நடிகர் விஜய் சேதுபதி 2019ல் "நம்ம ஊரு ஹீரோ" என்ற நிகழ்ச்சி மற்றும் 2021ல் "மாஸ்டர் செப் இந்தியா தமிழ் சீசன் 1" என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது நாளை முதல் ஒளிபரப்பாக உள்ள "பிக் பாஸ் சீசன் 8" நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகிறார்.
நடிகர் கமல்ஹாசன் 7 சீசன்களாக வெற்றிகரமாக தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியை விஜய் சேதுபதி எப்படி தொகுத்து வழங்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. கமல்ஹாசனின் இடத்தை நிரப்புவாரா விஜய் சேதுபதி என்பதை விட அந்த இடத்தை நெருங்குவாரா என்பதும் கேள்விதான். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி அதன் போட்டியாளர்களை மட்டும் நம்பி இல்லை, தொகுப்பாளர்களையும் நம்பித்தான் உள்ளது. தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை விஜய் சேதுபதி எப்படி காப்பாற்றப் போகிறார் என்பது வரும் வாரங்களில் தெரிந்துவிடும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!