
பிளாஷ்பேக்: எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு வாசல் திறந்து வைத்த எம்ஜிஆர்
ஆந்திராவை சேர்ந்த எஸ்.பி.பி.,க்கு பெரிய என்ஜீனியர் ஆக வேண்டும் என்பதுதான் ஆசை. இதற்காகத்தான் சென்னை வந்தார். பாடுவது என்பது அவரது பொழுதுபோக்காக இருந்தது. ஒரு பாடல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை பார்த்து, அந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டிருந்த ஜானகி அவர் சினிமாவில் பாட வேண்டும் என்று சொன்னார். அதன்பிறகுதான் அவரது கவனம் சினிமா பக்கம் திரும்பியது. சில தெலுங்கு, கன்னட படங்களில் பாடிவிட்டு 1969-ல் தான் எஸ்.பி.பி.யால் தமிழுக்கு வரமுடிந்தது.
முதலில் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் வாய்ப்பு கேட்டபோது "உன் தமிழ் உச்சரிப்பு சரியில்லை. நன்றாக தமிழ் கற்றுக் கொண்டு வா" என்று கூறி திருப்பி அனுப்பி விட்டார். அதன்பிறகு சினிமா போஸ்டர்கள், பத்திரிகைகளை எழுத்துகூட்டி படித்து தமிழ் கற்றுவிட்டு எம்.எஸ்.வி.,யிடமே திரும்ப சென்றார்.
அப்போது அவருக்கு கிடைத்த வாய்ப்புதான் "அடிமைப்பெண்". "ஆயிரம் நிலவே வா..." பாடலை பாடும் வாய்ப்பை அவருக்கு வழங்கினார். ஆனால் பாடல் பதிவாகும் நாளன்று எஸ்.பி.பிக்கு உடல்நலமில்லை. குரல் சரியில்லை. எம்.ஜி.ஆர்.,க்கு காலதாமதம் செய்வது பிடிக்காது என்பதால் வேறொருவரை கொண்டு அந்த பாடலை பதிவு செய்ய எம்.எஸ்.வி முடிவு செய்தார்.
இதனை கேள்விப்பட்ட எம்.ஜிஆர் "வேண்டாம் அந்த பையனே பாடட்டும்". என்று கூறிவிட்டார். பாடல் பதிவு முடிந்ததும் எஸ்.பி.பி எம்ஜிஆரை சந்தித்து நன்றி கூறச் சென்றார். அப்போது எம்ஜிஆர் ""தம்பி நீங்க எம்ஜிஆர் படத்துல பாடப்போறேன்னு எல்லார்கிட்டேயும் சொல்லியிருப்பீங்க. நீங்க பாடலைன்னா உங்க குரல் நல்லாஇல்லைன்னு நானே ரிஜிக்ட் பண்ணிட்டதா பேசுவாங்க. அது உங்க எதிர்காலத்துக்கு தடையா இருக்கும்ங்றதாலதான் உங்களையே பாடச் சொன்னேன்”. என்றார்.
அந்த "ஆயிரம் நிலவே" பாடல்தான் எஸ்.பி.பி.,யின் இசை வாழ்க்கைக்கு வாசல் கதவை திறந்து வைத்தது. பின்னாளில் எம்.ஜிஆர், தான் நடித்த எல்லா படங்களிலும் எஸ்.பி.பியை பாட வைத்தார். இன்று எஸ்.பி.பாலசுப்ரமணித்தின் 4வது நினைவு நாள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!