
கல்கி 2898 ஏடி படத்திற்குப் பிறகு வாழை படத்தைப் பாராட்டிய ரஜினிகாந்த்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த "வாழை" படத்தை அமெரிக்காவில் பார்த்த முதல்வர் ஸ்டாலின் நேற்று எக்ஸ் தளத்தில் தனது பாராட்டைப் பதிவு செய்திருந்தார். நேற்று இரவு நடிகர் ரஜினிகாந்த் அப்படத்தைப் பாராட்டி வாழ்த்துச் செய்தி ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
கடந்த ஜுன் மாதம் வெளிவந்த தெலுங்குப் படமான "கல்கி 2898 ஏடி" படத்தைப் பார்த்து பாராட்டி எக்ஸ் தளத்தில் தனது வாழ்த்தைப் பதிவு செய்திருந்தார் ரஜினிகாந்த். அதன் பிறகு அவர் பாராட்டியுள்ள படம் "வாழை" மட்டுமே. இடையில் வந்த வேறு எந்தப் படத்தைப் பற்றியும் அவர் பாராட்டவில்லை.
ரஜினி தனது பாராட்டு பதிவில், ‛‛ஒரு அற்புதமான, தரமான படம் தமிழில் ரொம்ப நாளைக்கு பிறகு வந்திருக்கிறது. மாரி செல்வராஜ் தன்னுடைய இளமை பருவத்துக்கே நம்மை அழைத்து சென்றிருக்கிறார். அதில் அந்த பையன் அனுபவிக்கும் துன்பங்கள், கஷ்டங்கள் அதை நாமே அனுபவிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. கிளைமாக்ஸில் அந்த பையன் பசியை தாங்காமல் அலையும் போது, அந்த தாய் என் பையனுக்கு ஒரு கைசோறு சாப்பிடவிடவில்லையே என்று கதறும்போது, நமது நெஞ்சமெல்லாம் துடிக்கின்றது. மாரி செல்வராஜ் தான் ஒரு தலைசிறந்த இயக்குனர் என்பதை இந்த படத்தின் முலம் நிரூபித்திருக்கிறார். மாரி செல்வராஜுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்"" என குறிப்பிட்டுள்ளார்.
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளிவந்த "தங்கலான்" படத்தைப் பார்த்தாரா இல்லையா என்பது தெரியவில்லை. இத்தனைக்கும் பா ரஞ்சித் இயக்கத்தில் "கபாலி, காலா" ஆகிய படங்களில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். "வாழை" படத்தை மட்டும் ரஜினிகாந்த் பாராட்டி வாழ்த்துச் செய்தி வெளியிட்டிருப்பது விக்ரம் ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!