
தமிழகத்தில் அதிக வசூலைக் கொடுத்த படங்கள் : ஆரம்பமானது சர்ச்சை…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த "விக்ரம்" படம் தமிழகத்தில் அதிக வசூலைக் குவித்த படம் என்று அப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். அதற்குப் பின் வெளிவந்த படங்களில் "பொன்னியின் செல்வன் 1, லியோ, ஜெயிலர்" ஆகிய படங்களும் தமிழகம் மட்டுமல்லாது உலக அளவிலும் 600 கோடி வசூலைக் கடந்த படங்களாக அமைந்தன. இருந்தாலும் அப்படங்களின் "தமிழக" வசூல் எவ்வளவு என்பது குறித்த விவரம் வெளியாகவில்லை.
இதனிடையே, "தி கோட்" படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், “தமிழகத்தைப் பொறுத்தவரையில், "லியோ" படம் வரும் வரை "பிகில்" படம்தான் அதிக வசூலைப் பெற்ற படமாக இருந்தது. "பிகில்" படத்தின் வசூலை "விக்ரம்" பட வசூல் முறியடித்தது. தற்போது வரை "லியோ" படம்தான் தமிழகத்தில் அதிக வசூலைக் குவித்துள்ள படம் என்ற சாதனையை வைத்துள்ளது,” என்று கூறியுள்ளார்.
அப்படியென்றால் "ஜெயிலர்" படம் "லியோ" படத்தின் சாதனையை முறியடிக்கவில்லையா என ரஜினி ரசிகர்கள் சர்ச்சையை எழுப்பியுள்ளார்கள். அதே சமயம், "ஜெயிலர்" படம்தான் தங்களுக்கு லாபத்தைத் தந்த படம், "லியோ" படம் லாபத்தைத் தரவில்லை என வினியோகஸ்தரும், தியேட்டர் அதிபருமான திருப்பூர் சுப்பிரமணியம் சொன்னதை நீங்கள் பார்க்கவில்லையா என்றும் கேட்கிறார்கள்.
அர்ச்சனா கல்பாத்தி அளித்த இந்த தமிழக வசூல் பற்றிய பேட்டியால் விஜய், ரஜினி ரசிகர்களிடையே மீண்டும் மோதல் உருவாகி உள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!