
பிளாஷ்பேக் : கிருஷ்ணனாக வாழ்ந்து குசேலனாக மறைந்த செருகளத்தூர் சாமா
தஞ்சாவூர் மாவட்டம், குடவாசலை அடுத்த செருகளத்தூரின் மிராசுதார் வைத்தியநாத ஐயரின் முதல் மகனாக 1904ம் ஆண்டு பிறந்தார். 5 வயதிலேயே தாயை இழந்ததால், தஞ்சை நகரத்தில் தாய்மாமாவின் வீட்டில் வளர்ந்தார். அங்கே பள்ளி இறுதி வகுப்பையும் கர்நாடக சங்கீதத்தையும் கற்றுக்கொண்டார். இயற்கையிலேயே கலை ஆர்வம் கொண்ட சாமா, "பாகவத மேளா" நாடகத்தில் நடித்து வந்தார்.
பின்னர் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சென்னை வந்தார். ஸ்டூடியோ பணியாளராக, ஒப்பனை கலைஞராக பணியாற்றி வாய்ப்பு தேடினார். கிடைக்காததால் சென்னையில் உள்ள காஸ்மோபாலிட்டன் கிளப்பில் கிளார்க்காக வேலைக்கு சேர்ந்தார். அந்த கிளப்புக்கு அடிக்கடி வரும் சிவகங்கை நாராயணன் என்ற ஸ்டூடியோ உரிமையாளர் சாமாவை "ஸ்ரீனிவாச கல்யாணம்" படத்தில் நாரதராக அறிமுகப்படுத்தினார். பின்னர் திரௌபதி வஸ்திராபகரணம் (1934) திரைப்படத்தில் கிருஷ்ணனாக வேடமேற்று நடித்தார். தொடர்ந்து மாயா பஜார் (1935), கருடகர்வ பங்கம், பாமா பரிணயம், சிந்தாமணி ஆகிய படங்களிலும் கிருஷ்ணன் வேடத்திலேயே நடித்தார். பல படங்களில் நடித்த சாமா சொந்தமாக படம் தயாரித்தார் அதுவே அவரது வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தது. அவர் தயாரித்த படங்கள் வெற்றி பெறாததால் இருந்த பொருள் அனைத்தையும் இழந்தார்.
இதனால் சாப்பிடவும், வாழவும் உதவித் தொகை கேட்டு மெட்ராஸ் ஸ்டேட் சங்கீத நாடக சங்கத்தில் விண்ணப்பித்தார். அந்த உதவி அவரை வந்தடையும் முன்பே சாமா காலமானார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!