
70 ஆண்டுகளை நிறைவு செய்த எம்ஜிஆர், சிவாஜி நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி
தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய ஜாம்பவான்களான அவர்கள் இணைந்து நடித்த ஒரே படமான "கூண்டுக்கிளி" வெளிவந்து இன்றுடன் 70 ஆண்டுகள் நிறைவடைகிறது. 1954ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி அப்படம் வெளியானது. ராமண்ணா தயாரித்து இயக்கிய படம். பி.எஸ். சரோஜா, குசலகுமாரி மற்றும் பலர் நடித்த படத்திற்கு இசை கே.வி. மகாதேவன்.
“கண்ணகியின் கற்பு மதுரையை அழித்தது….சீதாதேவியின் கற்பு இலங்கையை எரித்தது… மங்களாவின் கற்பு மிருகமான ஜீவாவை மனிதனாக்கியது…” என்ற வாசகங்களுடன் பட வெளியீட்டு விளம்பரம் அந்தக் காலத்தில் வெளிவந்தது. சென்னையில் இருந்த பாரகன், ராஜகுமாரி, மஹாராணி, உமா ஆகிய தியேட்டர்களில் வெளியான படம்.
அந்தக் கால கனவுக்கன்னி டி.ஆர்.ராஜகுமாரி தனது தம்பி ராமண்ணாவுக்காக ஆரம்பித்து வைத்த படம். இயக்குனர் ராமண்ணாவின் மனைவி பிஎஸ் சரோஜா தான் படத்தின் கதாநாயகி. இரண்டு ஹீரோக்கள் நடித்திருந்தாலும் இருவரது ரசிகர்களையும் திருப்திப்படுத்த முடியாத காரணத்தால் படம் தோல்வியைத் தழுவியது. எம்ஜிஆர் படமாகவும் இல்லை, சிவாஜி படமாகவும் இல்லை என்பதே அன்றைய ரசிகர்களின் குற்றச்சாட்டாக இருந்தது. எதிர்மறை நாயகனாக நடித்திருந்தார் சிவாஜி. அதற்கு முன்பு எதிர்மறை நாயகனாக "அந்த நாள், திரும்பிப் பார்" படங்களில் சிவாஜி நடித்திருந்தாலும், எம்ஜிஆர் நடித்த ஒரு படத்தில் அவர் அப்படி நடித்ததை அவரது ரசிகர்கள் ஏற்கவில்லை.
சுமாரான படம், இருவரது ரசிகர்களிடையே ஏற்பட்ட மோதல், உள்ளிட்ட சில காரணங்களால் படம் தோல்வியைத் தழுவியது. அவர்கள் நடித்த பல படங்கள் பின்னாட்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால், இந்தப் படத்தை மட்டும் யாரும் ரிரிலீஸ் செய்ய விரும்பவில்லை.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!