
7வது முறையாக தேசிய விருது வென்ற ஏஆர் ரஹ்மான்
சென்னையைச் சேர்ந்தவராக இருந்தாலும் உலக அளவில் புகழ் பெற்ற ஒரு இசையமைப்பாளராக இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். தமிழ் தவிர அதிக அளவில் ஹிந்திப் படங்களுக்கு இசையமைத்தவர். ஹாலிவுட் படங்கள், தெலுங்கு, மலையாளப் படங்கள் என கடந்த 32 வருடங்களாக முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார்.
சற்றுமுன் அறிவிக்கப்பட்ட 2022ம் ஆண்டில் வெளிவந்த படங்களுக்கான 70வது தேசிய விருதுகளில் சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருதை "பொன்னியின் செல்வன் 1" படத்திற்காக வென்றுள்ளார். அவர் பெறும் 7வது தேசிய விருது இது.
இதற்கு முன்பு முதல் முறையாக அவர் அறிமுகமான "ரோஜா" படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெற்றார். அதற்கடுத்து "மின்சார கனவு, லகான் (ஹிந்தி), கன்னத்தில் முத்தமிட்டால், காற்று வெளியிடை" ஆகிய படங்களுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை வென்றுள்ளார்.
2010ம் ஆண்டு முதல் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதுகள் “சிறந்த பாடல்களுக்காக, சிறந்த பின்னணி இசைக்காக” என பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.
அதன்பின் ஏஆர் ரஹ்மான் "மாம்" ஹிந்திப் படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதையும், தற்போது "பொன்னியின் செல்வன் 1" படத்திற்காக மீண்டும் அதே விருதையும் பெற்றுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!