
ஓடிடி நிறுவனங்களின் ஒப்பந்தங்களில் மாற்றம்?
தற்போது சாட்டிலைட் டிவிக்களை விடவும், ஓடிடி உரிமைகள் மூலம்தான் அதிக விலைக்கு படங்கள் விற்கப்படுகின்றன. முன்னணி நடிகர்களின் படங்களை வாங்க மட்டுமே ஓடிடி நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. மற்ற படங்களின் உரிமைகளை வாங்க அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அப்படிப்பட்ட படங்களை வரும் வருவாயை பங்கு பிரிப்பது என்ற அடிப்படையில் விற்கிறார்கள்.
சமீபகாலங்களில் முன்னணி நடிகர்களின் படங்களும் படுதோல்வியை சந்திப்பதால் அப்படங்களின் உரிமைகளை வாங்குவதில் ஓடிடி நிறுவனங்கள் புதிய முடிவுகளை எடுக்க இருப்பதாகத் தெரிகிறது. படம் தியேட்டர்களில் வெளியாவதற்கு முன்பாக முன்கூட்டியே படங்களின் ஓடிடி உரிமை வாங்கினாலும் பேசியபடி முழு தொகையைக் கொடுக்காமல் பட வெளியீட்டிற்குப் பின்பு அந்தப் படத்தின் வரவேற்பைப் பொறுத்து முடிவு செய்து கொள்ளலாம் என யோசித்து வருகிறார்களாம். சமீபத்தில் வெளிவந்த ஒரு பெரிய படத்தின் தோல்விதான் இதற்குக் காரணம் என கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
ஓடிடி உரிமைகளை முன் கூட்டியே விற்க முடியாததால் சில படங்களை ஆரம்பிப்பதையும் தள்ளிப் போட்டு வருகிறார்கள். சில படங்களை "டிராப்" செய்தும் விட்டார்கள். ஒரு படத்தின் முதலீட்டில் கணிசமான தொகை என்பது ஓடிடி உரிமை மூலமே வருகிறது. இந்நிலையில் ஓடிடிக்கு புதிய படங்களைக் கொடுக்க 8 வார இடைவெளி என தயாரிப்பாளர் சங்கம் சொன்னது போல வந்தால் ஓடிடி உரிமைகளை வாங்குவதிலிருந்து நிறுவனங்கள் பின்வாங்கும் எனத் தெரிகிறது.
அதற்குப் பதிலாக சொந்தமாகவே படங்கள் அல்லது வெப் சீரிஸ்கள் ஆகியவற்றைத் தயாரித்துக் கொள்ளலாம் என சில நிறுவனங்கள் உள்ளுக்குள் ஆலோசித்து வருகிறார்களாம். 2025ல் ஓடிடி உரிமைகள் விஷயத்தில் பெரிய மாற்றங்கள் வரலாம் என்பதே தற்போதை நிலை.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!