
அரவிந்த்சாமி வழக்கு : தயாரிப்பாளருக்கு கைது வாரன்ட்
அரவிந்த்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஏப்ரல் 2017ம் ஆண்டு, ஏப்ரல் 7ம் தேதி இப்படத்தில் நடிப்பதற்காக தயாரிப்பாளருடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு 3 கோடி ரூபாய் சம்பளம் என்றும், அந்த சம்பளத்தை படத்தின் உருவாக்கத்தின் போது தர வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது. அத்துடன் வருமான வரித் துறைக்கு செலுத்த வேண்டிய டிடிஎஸ் தொகையை தயாரிப்பாளர் நேரடியாக அத்துறைக்கு செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது.
அப்படம் முடிவடைந்து 2018 மே 17ம் தேதியன்று வெளியானது. ஆனால், தயாரிப்பாளர் முழு சம்பளத்தையும் கொடுக்காமல் 30 லட்ச ரூபாய் பாக்கி வைத்தார். அது மட்டுமல்ல வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டிய டிடிஎஸ் தொகையான 27 லட்ச ரூபாயையும் செலுத்தவில்லை. மேலும் தயாரிப்பாளர் படத்தை வெளியிட அரவிந்த்சாமியிடம் 35 லட்ச ரூபாய் கடனும் வாங்கியிருந்தார். அதையும் திருப்பித்தரவில்லை.
இதனால், வட்டியுடன் அனைத்துத் தொகையையும் திருப்பித் தரவேண்டும் என 2018ம் ஆண்டு தயாரிப்பாளர் மீது வழக்கு தொடரப்பட்டது. 2019ல் இந்த வழக்கில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அளித்த தீர்ப்பில் தயாரிப்பாளர் முருகன் 65 லட்ச ரூபாயை 18 சதவீத வட்டியுடன் திருப்பித் தரவேண்டும், 27 லட்ச ரூபாயை வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அந்தத் தீர்ப்பை நிறைவேற்றக் கோரி அரவிந்த்சாமி தரப்பில் மீண்டும் மனு செய்யப்பட்டிருந்தது. தயாரிப்பாளர் தரப்பில் வாதிட்ட வக்கீல் தனது மனுதாரர் சொத்து விவரங்களை தாக்கல் செய்துள்ளதாகவும், அவரிடம் சொத்து எதுவுமில்லை என்று வாதிட்டுள்ளார். அவரது வாதத்தைக் கேட்ட நீதிபதி வழக்கை ஜூலை 8க்கு தள்ளி வைத்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!