
ராமோஜி பிலிம் சிட்டி நிறுவனர் ராமோஜி ராவ் மறைவு
பிரம்மாண்டமான அரங்குகள், நட்சத்திர ஹோட்டல்கள் மற்ற தொழில்நுட்ப வசதிகள் என அமைந்த ஸ்டுடியோ. இந்தியத் திரையுலகத்தின் பல்வேறு மொழிப் படங்களும் அங்கு தயாராகி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு ஸ்டுடியோவை நிர்மாணித்தவரும், ஈநாடு பத்திரிகை, டிவி ஆகியவற்றை நிறுவியவருமான ராமோஜி ராவ் வயது மூப்பின் காரணமாக இன்று அதிகாலை மறைந்தார். அவருக்கு வயது 87.
கடந்த சில நாட்களாகவே உடல் நலக் குறைவு ஏற்பட்டு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் பெத்தபருப்புடி என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் 1936ம் ஆண்டு பிறந்தவர். ஆந்திர, தெலுங்கானா மாநில அரசியலிலும் சக்தி வாய்ந்த நபராக இருந்தவர்.
2016ம் ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்ம விபூஷண் விருதை வழங்கியுள்ளது.
“ஸ்ரீவாரிக்கி பிரேமலேகா, மயூரி, பிரதிகடனா, மௌன போராட்டம், மனசு மமதா, சித்ரம், நுவ்வே காவாலி” உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர். "பிரதிகடனா" என்ற படம் "பூ ஒன்று புயலானது" என்ற பெயரில் தமிழில் டப்பிங் ஆகி இங்கும் பெரும் வரவேற்பு பெற்று ஓடியது. அவர் தயாரித்த படங்கள் ஆந்திர மாநில நந்தி விருதுகள், தேசிய விருதுகள் உள்ளிட்டவற்றைப் பெற்றுள்ளது.
ராமோஜி ராவ் மறைவுக்கு அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!