
பிளாஷ்பேக்: ஆயிரத்தில் ஒருத்தியாக இருந்து தனியொருத்தியாக வளர்ந்த டி.பி.முத்துலட்சுமி
முத்துலட்சுமியின் சொந்த ஊர் தூத்துக்குடி. தந்தை பொன்னையா பாண்டியர். தாயார் சண்முகத்தம்மாள். அவர்களுடைய ஒரே மகள் முத்துலட்சுமி. தூத்துக்குடியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். படிக்கும்போதே பாட்டும், நடனமும் கற்றுக்கொண்டு சினிமா துறையில் நுழைய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. எட்டாம் வகுப்பை முடித்தபோது, தன் விருப்பத்தை பெற்றோரிடம் கூறினார். "நமக்கெல்லாம் சினிமா ஒத்து வராது. அந்த ஆசையை விட்டு விடு"" என்று கூறிவிட்டனர்.
ஆனால் முத்துலட்சுமி மனம் தளரவில்லை. எப்படியும் சினிமா நடிகை ஆக வேண்டும் என்று சென்னையில் அவருடைய மாமா எம்.பெருமாள், உதவியுடன் சினிமாத்துறையில் நுழைய முடிவு செய்தார். பெற்றோரிடம் சொல்லிக் கொள்ளாமல் சென்னைக்கு ரயில் ஏறினார். பெருமாளின் முயற்சியால் "சந்திரலேகா" படத்தில் வரும் முரசு நடனத்தில் ஆயிரம் பேருடன் ஆடினார். சில காட்சிகளில் டி.ஆர்.ராஜகுமாரிக்கு டூப்பாக ஆடினார்.
அதன்பிறகு படிப்படியாக உயர்ந்து நடிகை ஆனார். ஆரம்பத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த அவர் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த "பொன்முடி" படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார். அது முத்துலட்சுமியின் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அதன் பிறகு 300 படங்களுக்கு மேல் காமெடி நடிகையாகவே நடித்தார்.
முத்துலட்சுமி தன்னை சினிமாவில் நடிக்க வைத்த தனது மாமா பெருமாள் மகன் டி.பி.கஜேந்திரனை தத்தெடுத்து வளர்த்தார். டி.பி.கஜேந்திரன் பெரிய இயக்குனராகி 25 படங்களுக்கு மேல் இயக்கினார். டி.பி.முத்துலட்சுமியின் 16வது நினைவு நாள் இன்று.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!