
ராம் படத்திற்காக பல விஷயங்களை திரும்ப கொண்டுவர போராடுகிறோம் : ஜீத்து ஜோசப்
வெளிநாடுகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியபோது கொரோனா தாக்கம் ஆரம்பித்ததால் மேற்கொண்டு படப்பிடிப்பை நடத்த முடியாமல் நிறுத்தி விட்டனர். அதன் பிறகு கொரோனா இரண்டாவது அலை முடிந்த சமயத்தில் மீண்டும் ராம் படத்தை தூங்குவதில் நடைமுறை சிரமங்கள் நிறைய இருந்ததால் அதன்பிறகு ஜீத்து ஜோசப் வெவ்வேறு படங்களை இயக்க ஆரம்பித்து விட்டார். இந்த நிலையில் ராம் படத்தை மீண்டும் எப்போது துவங்குவீர்கள் என சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஜீத்து ஜோசப், “இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளில் தான் திட்டமிடப்பட்டிருந்தது.. இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது கொண்டிருந்தபோதே இந்த படத்தின் கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவருக்கு காயம் ஏற்பட்டு அதனால் சில நாட்கள் தாமதமானது. அடுத்து கொரோனா தாக்கம் காரணமாக இரண்டு வருடங்களாக இந்த படத்தை மேற்கொண்டு நகர்த்த முடியவில்லை. மீண்டும் இப்போது படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்றால் வெவ்வேறு நாடுகளில் திட்டமிடப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பை அங்கே நிலவும் கால நிலைக்கு ஏற்றபடி தான் நடத்த வேண்டி இருக்கிறது. இல்லையென்றால் ஏற்கனவே எடுத்த காட்சிகளும் வீணாகிவிடும்.
அதுமட்டுமல்ல இதற்கான நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை மீண்டும் வெளிநாட்டு படப்பிடிப்பில் ஒன்றிணைப்பதிலும் சிரமம் இருக்கிறது. இத்தனை வருடங்கள் தாமதமான ஒரு படத்தை விட்ட இடத்தில் இருந்து மீண்டும் துவங்குவதற்கு ஒரு தயாரிப்பாளருக்கு நிறைய நடைமுறை சிரமங்களும் இருக்கின்றன. ஆனாலும் இவற்றையெல்லாம் சரி செய்து இந்த படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன. நிச்சயம் ராம் வெளியாகும்” என்று கூறியுள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!