
ரஜினி - விஜய் ரசிகர்கள் சண்டை முடிவுக்கு வருமா ?
விஜய்யின் இளம் வயது ரசிகர்களும், அவர்களது அப்பா வயதில் உள்ள ரஜினியை மரியாதையற்ற வார்த்தைகளால் கடுமையாகத் திட்டினார்கள். சில வாரங்களுக்கு முன்பு கூட சமூக வலைத்தளங்களில் இந்த சண்டை நடந்தது. நேற்று "லால் சலாம்" இசை வெளியீடு நடப்பதற்கு முன்பாகவும் தொடர்ந்தது.
இந்நிலையில் "லால் சலாம்" இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், ““கழுகு, காக்கா என்று கூறிய கதையை விஜய்யையும் என்னையும் ஒப்பிட்டுப் பேசியதாக பலரும் கூறுகிறார்கள், ஆனால் அது தவறு. விஜய்யை என்னுடன் ஒப்பிட்டு நான் பேசவில்லை. விஜய்யுடன் என்னை ஒப்பிட்டால் அது எனக்கு மரியாதை இல்லை, அதே போல் என்னுடன் விஜய்யை ஒப்பிட்டால் விஜய்க்கு மரியாதை இல்லை. எனது ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் இப்படி ஒப்பிட்டுப் பேச வேண்டாம், அதை நிறுத்துங்கள், என்னுடைய அன்பான வேண்டுகோள்” என்றார்.
ரஜினியின் பேச்சை பெருந்தன்மையான பேச்சு என சில ரசிகர்கள் எடுத்துக் கொண்டார்கள். ஆனால், சிலர் அப்போது அப்படி பேசிவிட்டு, இப்போது இப்படி பேசுவது எந்த விதத்தில் நியாயம் என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.
விஜய் நடித்து வெளிவந்த "லியோ" படத்தின் வெற்றி விழாவில் பேசிய அப்படத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான ரத்னகுமார் “எவ்வளவு உயர பறந்தாலும் பசித்தால் கீழே இறங்கி வர வேண்டும்,” என ரஜினி பேசிய "காக்கா கழுகு" கதைக்கு பதிலடி கொடுத்துப் பேசினார். அதனால், அவரை ரஜினி ரசிகர்கள் கடுமையாகத் திட்டினார்கள். மறுநாளே சமூக வலைத்தளங்களிலிருந்து விலகுவதாக அறிவித்தார் ரத்னகுமார்.
ரஜினி சொன்ன "காக்கா கழுகு" கதை விஜய்யைப் பற்றிக் குறிப்பிடுவதாக நேரடியாக விமர்சித்து சிக்கலை அதிகமாக்கினார் ரத்னகுமார்.
எல்லாவற்றையும் மறந்து ரஜினி, விஜய் ரசிகர்கள் இனிமேல் சமூக வலைத்தளங்களில் சண்டை போடாமல் இருப்பார்களா, விஜய்யைப் பற்றி ரஜினி பாராட்டிப் பேசியதை ஏற்றுக் கொண்டு அமைதி காப்பார்களா என்பது போகப் போகத்தான் தெரியும்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!