
சிம்பு, விஷால், ராகவா லாரன்ஸுக்கு பிரேக் கொடுத்த எஸ்ஜே சூர்யா
பெரிய ஸ்டார் நடித்த படத்தில் அவருக்கு எதிராக திறமையான வில்லன் நடிகர் இல்லாமல் போனாலோ, உடன் நடிக்கும் நடிகர்கள் சிறப்பாக நடிக்காமல் போனாலோ அதுவே படத்திற்கு மைனஸ் ஆகவும் அமையும். இப்படியான விமர்சனங்களை பல படங்களில் பார்த்திருக்கலாம்.
தமிழ் சினிமாவில் சில தொடர் தோல்விகளைக் கொடுத்த சில நடிகர்களுக்கு, அவர்களுக்கு எதிராக வில்லனாகவோ, குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் நடித்த நடிகராகவோ நடித்து ஒரு நடிகர் அவர்களுக்கும் "பிரேக்" கொடுத்து வருகிறார். அவர் எஸ்ஜே சூர்யா.
"வாலி, குஷி" என அஜித், விஜய்க்கு இரண்டு சூப்பர் ஹிட் பிரேக் படங்களைக் கொடுத்தவர் எஸ்ஜே சூர்யா. தற்போது நடிகராக பல படங்களில் அவரது தனித்த முத்திரையைப் பதித்து வருகிறார். "இன்றைய நடிகவேள்" என ரஜினிகாந்த் பாராட்டும் அளவிற்கு அவருடைய நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
சிம்பு நடித்து வெளிவந்த "மாநாடு" படத்தில் வில்லனாக நடித்து அந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்தார். அதற்கு முன்பு சிம்பு நடித்து வெளிவந்த "ஈஸ்வரன், வந்தா ராஜாவாதான் வருவேன்," ஆகிய இரண்டு படங்களும் தோல்விப் படங்கள்.
விஷால் நடித்து வெளிவந்த "மார்க் ஆண்டனி" படத்தில் வில்லனாக நடித்து அந்தப் படமும் வெற்றி பெறுவதற்குக் காரணமாக இருந்தார். அதற்கு முன்பு விஷால் நடித்து வெளிவந்த “சண்டக்கோழி 2, அயோக்யா, ஆக்ஷன், சக்ரா, எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி” என ஏழு தோல்விப் படங்களைக் கொடுத்தார் விஷால். அவரை வெற்றிப் படிக்கட்டுகளில் ஏற்ற வைத்ததில் எஸ்ஜே சூர்யாவுக்குப் பங்குண்டு.
ராகவா லாரன்ஸ் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்". அப்படத்தில் மற்றொரு நாயகனாக குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டுக்களைப் பெற்றார் எஸ்ஜே சூர்யா. இப்படத்திற்கு முன்பு ராகவா லாரன்ஸ் நடித்து வெளிவந்த “சந்திரமுகி 2, ருத்ரன்,” ஆகிய இரண்டும் சரியாக ஓடவில்லை.
எஸ்ஜே சூர்யா தற்போது, ஷங்கர் இயக்கி வரும் "இந்தியன் 2, கேம் சேஞ்சர்", மற்றும் தனுஷ் 50 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!