
சினிமாவில் 10 ஆண்டுகள், நன்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ்
குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் மூன்று படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் 2013ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதி வெளிவந்த மலையாளப் படமான "கீதாஞ்சலி" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பிரியதர்ஷன் இயக்கத்தில், மோகன்லால் கதாநாயகனாக நடித்த படம் அது. முதல் படத்திலேயே கீர்த்தி சுரேஷ் இரண்டு வேடங்களில் நடித்தார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
தமிழில் 2015ல் வெளிவந்த "இது என்ன மாயம்" படத்தில் அறிமுகமானார். அந்தப் படம் தோல்வியடைந்தது. ஆனாலும், 2016ல் வெளிவந்த "ரஜினி முருகன்" பெரும் வெற்றி பெற்றதால் கீர்த்தி தமிழிலும் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்றார்.
2016ல் வெளிவந்த "நேனு சைலஜா" படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கிலும் நடித்தார். நடிகை சாவித்ரியின் பயோபிக் படமான "மகாநடி" படத்தில் சாவித்ரி கதாபாத்திரத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.
தற்போது தமிழில் "சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி" ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தமிழில் விஜய் நடித்து வெளிவந்த "தெறி" படத்தின் ஹிந்தி ரீமேக் மூலம் அங்கு அறிமுகமாக உள்ளார் கீர்த்தி.
தற்போதுள்ள தமிழ் நடிகைகளில் திரிஷா 20 வருடங்களுக்கு மேலாகவும், நயன்தாரா 20 வருடங்களை நெருங்கியும் நடித்து வருகிறார்கள். காஜல் அகர்வால், தமன்னா 15 வருடங்களைக் கடந்துள்ளார்கள். ஹீரோக்கள் "டாமினேட்" செய்யும் திரையுலகத்தில் பத்து வருடங்களாக கதாநாயகியாக தொடர்வது ஒரு சாதனைதான்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!