
ஓப்பன்ஹெய்மர் படம் எப்படி உள்ளது...?
தற்போது நோலன் இயக்கியுள்ள "ஓப்பன்ஹெய்மர்" இரண்டாம் உலகப் போரின்போது அணுகுண்டு தயாரிக்க உதவிய அமெரிக்க இயற்பியலாளர் ஜே.ராபர்ட் ஒப்பன்ஹெய்மரைப் பற்றி பேசுகிறது. அணு ஆராய்ச்சியின் தந்தை என்று இவர் போற்றப்படுகிறார். பின்னாளில் அரசால் பல விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட ஓப்பன் ஹெய்மர், ஹிரோஷிமா, நாகசாகி மீது அணு குண்டு வீசப்பட்ட பிறகு மிகவும் மனஅழுத்தத்திற்கு ஆளாகி மரணம் அடைந்தார். அவரை பற்றிய படம் இது.
தொடர் வெற்றிகளை கொடுத்த கிறிஸ்டோபர் நோலனின் படம் என்பதாலும், இந்த படத்திற்காக அவர் நிஜமாகவே அணுகுண்டை வெடிக்க வைத்து படம்பிடித்தார் என்பதாலும் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் சிலியன் மர்பி நடித்துள்ளார். "அயர்ன்மேன்" புகழ் ராபர்ட் டவுனி ஜூனியர், எமிலி பிளன்ட், மேட் டேமன், ப்ளோரன்ஸ் பக் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்த படம் இன்று வெளியாகி உள்ளது. சென்னையில் பல தியேட்டர்களில் அதிகாலை காட்சிகள் கூட திரையிடப்பட்டது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களுக்கான ஐமேக்ஸ் திரையரங்கு டிக்கெட்டுகள் டில்லி, மும்பை, சென்னையில் விற்று தீர்ந்துவிட்டன. சென்னையை பொறுத்தவரை ஐமேக்ஸ் டிக்கெட்டுகளை அடுத்த 3 நாட்களுக்கு ஹவுஸ்புல்லாக உள்ளது. மற்ற திரையரங்கு டிக்கெட்டுகள் ஓரளவுக்கு வேகமாக விற்பனையாகி வருகின்றன.
இந்த நிலையில் நேற்று பல முக்கிய நகரங்களில் முக்கிய பிரமுகர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. சில நாடுகளில் நேற்றே வெளியானது. வழக்கமான நோலன் படங்களில் இருந்து இந்தப்படம் மிகவும் வித்தியாசப்பட்டது. அணுகுண்டு, விஞ்ஞானம் என்ற அறிவியலை தாண்டி மனித உணர்வுகளையும், அரசியல் அதிகாரத்தை பற்றியும் இந்தப்படம் அதிகம் பேசுகிறது. நிச்சயம் சினிமா விமர்சகர்கள், நிபுணர்களால் இந்த படம் வரவேற்கப்படலாம், கொண்டாடப்படலாம்.
ஆனால் பொதுமக்களை கவரும் அம்சங்கள் எதுவும் படத்தில் இல்லை என்பதே உண்மை. ஒரு பயோபிக் படம் எப்படி இருக்க வேண்டும், எவ்வளவு நேர்த்தியுடன் இருக்க வேண்டும் என்கிற வகையில் இந்த படம் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் கிறிஸ்டோபர் நோலன் படங்களுக்கே உரிய காட்சி அனுபவம், திரைக்கதை இந்த படத்தில் இல்லை. அணுகுண்டு வெடிப்பு காட்சி தவிர மற்ற காட்சிகள் அனைத்தும் சாதாரண வசன காட்சிகளாகவே இருக்கிறது. அதிலும் திரும்ப திரும்ப வரும் ஒரு அறையில் நடக்கும் விசாரணை காட்சிகள், படத்தின் நீளம், மெதுவாக நகரும் திரைக்கதை சலிப்பூட்டுகிறது. 3 மணி நேர படத்தில் 30 நிமிட காட்சிகள் தவிர மற்ற காட்சிகள் வசனங்களால் நிறைந்திருக்கிறது. இப்படியான விமர்சனங்கள் வரத் தொடங்கி உள்ளன.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!