
பிரபல நடிகர், நடிகையருடன் தயாரிப்பாளர்கள் மோதல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் தனுஷ், சிம்பு, அதர்வா, எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, யோகிபாபு; நடிகையரில் அமலாபால், லட்சுமி ராய், சோனியா அகர்வால் ஆகியோர் மீது, தயாரிப்பாளர்கள் சிலர், நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரில், "சில நடிகர்கள், கொடுத்த கால்ஷீட்டின்படி நடித்துக் கொடுக்கவில்லை. சில நடிகையர் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தில் உறுப்பினர் இல்லாதவர்களை உதவியாளர்களாக வைத்துள்ளனர்.
பாதுகாவலர்களாகவும் அழைத்து வருகின்றனர். அவர்களுக்கு சம்பளம் கேட்கின்றனர்" என, கூறப்பட்டுள்ளது. "தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன உறுப்பினர்களை உதவியாளர்களாக வைத்திருந்தால், சம்பளம் தருவோம்" என, தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் தனுஷ், சிம்பு, அதர்வா, யோகிபாபு மீது, "ரெட் கார்டு" போடும் நிலையை தவிர்க்க வேண்டும் என்பதற்காக, தயாரிப்பாளர்கள் சங்கத்தில், நடிகர்கள் சிலரும் புகார் மனு அளித்துள்ளனர். புகாரில், "எங்களிடம் கால்ஷீட் பெற்ற தயாரிப்பாளர்கள் சரிவர படப்பிடிப்பு நடத்தாமல், உப்புமா கம்பெனி தயாரிப்பாளர்களாக செயல்படுகின்றனர்" என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், பூச்சி முருகன், தயாரிப்பாளர் சங்க நிர்வாகி முரளி, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன நிர்வாகி செல்வமணி இடையே முத்தரப்பு பேச்சு நடந்தது. நடிகர்களுக்கு ரெட்கார்டு விதிக்கக் கூடாது எனக் கூறி, புகார் கடிதங்களை ஆதாரமாக காட்டி, பூச்சி முருகன் பஞ்சாயத்து நடத்திய பின், அவர்களின் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!