
ராமாயணத்தை முழுமையாக புரிந்து கொள்ள முடியாது: ஆதிபுருஷ் இயக்குனர், வசனகர்த்தா பதில்
எதிர்மறை விமர்சனங்கள் குறித்து இயக்குனர் ஓம் ராவத் கூறியிருப்பதாவது: பாக்ஸ் ஆபீஸில் படம் எந்த மாதிரியான வரவேற்பை பெறுகிறது என்பதுதான் முக்கியம். அந்த வகையில் முதல் நாளிலிருந்து உலகம் முழுவதும் படம் வசூலில் முன்னேறி வருகிறது என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நான் ராமாயணத்தை புரிந்துகொண்டேன் என்று சொன்னால் அது மிகப்பெரிய தவறு. ஏனென்றால், ராமாயணத்தை புரிந்துகொள்ளும் திறன் யாருக்குமே இல்லை. நான் எந்த அளவுக்கு ராமாயணத்தை தெரிந்துகொண்டேனோ, நீங்கள் அதை எந்த அளவுக்கு புரிந்துகொண்டீர்களோ எல்லாமே சிறுபகுதிதான். ராமாயணத்தைப் பற்றி நான் புரிந்துகொண்ட அந்தச் சிறு பகுதியை செல்லுலாய்டில் சித்தரிக்க முயற்சித்தேன். ராமாயணம் மிகப் பெரியது. அதை முழுமையாக புரிந்துகொள்வது இயலாத காரியம். அதை யாராவது முழுமையாக புரிந்துகொண்டதாக சொன்னால் அவர்கள் முட்டாள்களாக இருப்பார்கள் அல்லது பொய் சொல்லக்கூடியவர்களாக இருப்பார்கள். என்றார்.
வசனகர்த்தா மனோஜ் முன்டாஷிர்
படத்தின் வசனகர்த்தா மனோஜ் முன்டாஷிர் சுக்லா தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: ராமாயணத்தில் இருந்து ஒருவர் கற்றுக் கொள்ளக்கூடிய முதல் பாடம், அனைவரது உணர்வுகளையும் மதிக்க வேண்டும் என்பதுதான். சரியோ தவறோ, காலம் மாறும் உணர்வுகள் மட்டுமே நிலைத்திருக்கும். "ஆதிபுருஷ்" படத்தில் நான் 4000 வரிகளுக்கு மேல் வசனம் எழுதியுள்ளேன். ஆனால் 5 வரிகளால் சிலரது உணர்வுகள் புண்பட்டுவிட்டன. நூற்றுக்கணக்கான வரிகளில் ஸ்ரீராமரை போற்றியிருந்தேன், சீதையின் கற்பை பற்றி விவரித்திருந்தேன். அவற்றுக்கான பாராட்டும் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அது எனக்கு ஏன் கிடைக்கவில்லை என்று தெரியவில்லை.
3 மணி நேரம் ஓடக்கூடிய படத்தில் உங்கள் கற்பனையுடன் மாறுபடும் 3 நிமிட வசனங்களை நான் எழுதியிருக்கலாம். ஆனால் அதற்காக என் நெற்றியில் "சனாதன துரோகி "என்று எழுத ஏன் அவசரப்பட்டீர்கள் என்று என்னால் அறிய முடியவில்லை. "ஜெய் ஸ்ரீராம்" பாடலை நீங்கள் கேட்கவில்லையா? "சிவோஹம்" கேட்கவில்லையா? "ராம் சியா ராம்" கேட்கவில்லையா? "ஆதிபுருஷ்க் படத்தில் சனாதனத்தின் இந்த துதிகளும் என் பேனாவிலிருந்து பிறந்தவைதான். உங்கள் மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை, நீங்கள் என் சகோதரர்களாகவே இருந்தீர்கள், இருக்கிறீர்கள், எப்போதும் இருப்பீர்கள். நாம் ஒருவரை ஒருவர் எதிர்த்து நின்றால் சனாதனம் தோற்றுவிடும். சனாதன சேவைக்காகவே ஆதிபுருஷை உருவாக்கியுள்ளோம்.
வசனம் திருத்தம்
ஏன் இந்த பதிவு? காரணம், எனக்கு உங்களின் உணர்வை விட பெரியது எதுவும் இல்லை. எனது வசனங்களுக்கு ஆதரவாக எண்ணற்ற வாதங்களை என்னால் முன்வைக்க முடியும். ஆனால் அது உங்கள் வலியைக் குறைக்காது. நானும், படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநரும் சேர்ந்து உங்களைப் புண்படுத்தும் சில வசனங்களை திருத்த முடிவு செய்துள்ளோம். மேலும் திருத்தப்பட்ட வசனங்கள் இந்த வாரத்தில் படத்தில் சேர்க்கப்படும். உங்கள் அனைவருக்கும் ஸ்ரீ ராமர் அருள் புரியட்டும். இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!