
இளையராஜாவை மிஸ் செய்கிறேன் - மணிரத்னம்
பாலசந்தர் தயாரிப்பில், மணிரத்னம் இயக்க 1992ல் வெளிவந்த "ரோஜா" படத்தில் ஏஆர் ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதற்கு முன்பாக பாலசந்தருக்கும், இளையராஜாவுக்கும் பிரச்சினை ஆனதால், அந்தப் படத்தில் இளையராஜா இசையமைப்பதை பாலசந்தர் விரும்பவில்லை. எனவே, விளம்பரப் படங்களுக்கு இசையமைத்து வந்த ஏஆர் ரகுமானை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார்கள். அன்றிலிருந்து இன்று வரை சுமார் 30 ஆண்டுக்கும் மேலாக மணிரத்னம், ஏஆர் ரகுமான் கூட்டணி நிலைத்து நிற்கிறது.
இருந்தாலும் மணிரத்னம், இளையராஜா கூட்டணியில் வந்த படங்களின் பாடல்கள் 30 ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கிறது. குறிப்பாக "இதயக் கோயில், மௌனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், தெலுங்கில் "கீதாஞ்சலி," அதன் தமிழ் டப்பிங்கான "இதயத்தை திருடாதே", அஞ்சலி, தளபதி” ஆகிய படங்களின் பாடல்கள், பின்னணி இசை இன்றும் இசை ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டு வருகிறது.
மணிரத்னம், இளையராஜா கூட்டணி மீண்டும் இணையாதா என அந்தக் கால ரசிகர்கள் ஏங்கித்தான் போயிருக்கிறார்கள். "பொன்னியின் செல்வன்" படம் வெளிவந்த போது அப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று விவாதித்தவர்களும் உண்டு.
இந்நிலையில் "பொன்னியின் செல்வன் 2" படத்திற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்த மணிரத்னத்திடம் “இளையராஜாவை மிஸ் செய்கிறீர்களா ?,” என்று கேட்டதற்கு, “ஆமாம், அவர் ஒரு ஜீனியஸ். என் முதல் படத்திலிருந்து பல படங்களுக்கு அவர் இசையமைத்தார். அவரால் நான் வளர்ந்தேன். ஒவ்வொரு படத்திலும் அவரையும், பி.சி.ஸ்ரீராமையும் மிஸ் செய்கிறேன். அந்தந்த படங்களின் கதை, சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி மாறுகிறது,” என பதிலளித்தார்.
அந்த எவர்க்ரீன் கூட்டணி மீண்டும் இணையுமா என்பதுதான் பல ரசிகர்களின் விருப்பம். இளையராஜவும், மணிரத்னமும் இணைந்து மனம் வைப்பார்களா ?.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!