
கோடிகளை கொட்டிக் கொடுத்தாலும் தரமற்ற படத்தில் நடிக்க மாட்டேன் : ராமராஜன்
இந்த படத்தில் ராதாரவி மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். நக்ஷரா என்ற புதுமுகம் ஹீரோயின். அச்சு ராஜாமணி இசையில் உருவாகும் இப்படத்திற்கு அருள் செல்வன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.ராகேஷ் இயக்குகிறார். எக்ஸ்ட்ரா எண்டர்டெயின்மென்ட் சார்பில் மதியழகன் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் தயாராகிறது. இது ராமராஜனின் 45வது படம். இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று இரவு நடந்தது.
விழாவில் கலந்து கொண்டு ராமராஜன் பேசியதாவது : 10 வருடங்களுக்கு பிறகு நடிக்க வந்திருக்கிறேன். தொடர்ந்து நடித்திருப்பேன், ஆனால் அரசியல் பணிகள் வந்தது, ஒரு பெரிய விபத்தில் சிக்கி ஒரு வருடத்திற்கு மேல் ஓய்வெடுக்க வேண்டியதாகி விட்டது. அதன்பிறகு பலரும் வந்து என்னிடம் கதை சொன்னார்கள், நடிக்க அழைத்தார்கள், கோலிசோடா 2, கரகாட்டக்காரன் 2 படங்களில் நடிக்க கேட்டார்கள். எனக்கு இரண்டாம் பாக கதைகளில் நடிக்க விருப்பமில்லை என்று சொல்லிவிட்டேன்.
நான் "மக்கள் நாயகன்" என்று பெயர் எடுத்தவன். எனவே மக்களுக்கு பயனுள்ள படங்களில்தான் நடிப்பேன். கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் தரமற்ற படங்களில் நடிக்க மாட்டேன். நான் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்ற எங்கேயும் சொன்னதில்லை. அப்படி யாரோ சொல்லி பரவியது. சரி அதுவும் நியாயம்தான் என்று நானும் அமைதியாக இருந்து விட்டேன். இப்போதெல்லாம் கதைதான் ஹீரோ. நல்ல கதையோடு வந்தால் தொடர்ந்து நடிப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!