
மீண்டும் பழைய தயாரிப்பாளரிடம் வந்த சூர்யா 42
சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிக்கும் 39வது படத்தைத் தாங்கள் தயாரிக்கப் போவதாக ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் 2019ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி அறிவித்தது. ஆனால், அந்தப் படத்தை இயக்குவதை விட்டுவிட்டு ரஜினிகாந்த் நடித்த "அண்ணாத்த" படத்தை இயக்கப் போய்விட்டார் சிவா. அதனால், சிவாவுக்குப் பதிலாக சூர்யாவின் 39வது படத்தை ஹரி இயக்குவார் எனவும் அந்தப் படத்திற்கு "அருவா" எனப் பெயரிட்டுள்ளதாகவும் 2020ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி ஸ்டுடியோ க்ரீன் அறிவித்தது. ஆனால், அந்தப் படமும் நடக்காமல் டிராப் செய்யப்பட்டது. கடைசியில் சூர்யாவின் 39வது படமாக "ஜெய் பீம்" படம் வெளிவந்தது.
அதன் பிறகு சமீபத்தில் சூர்யா - சிறுத்தை சிவா கூட்டணி இணையும் படத்தை தெலுங்கு தயாரிப்பு நிறுவமான யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் என அறிவிப்பு வெளிவந்தது. அந்தக் கூட்டணியை மூன்று வருடங்களுக்கு முன்பு அறிவித்த ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்காமல் யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பதாக வந்த அறிவிப்பை திரையுலகத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சூர்யாவின் இந்த 42வது படத்தில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனமும் கூட்டாக சேர்ந்து தயாரிக்க உள்ளதாம். இந்த வாரத்திற்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். இந்தப் படத்திற்குப் பிறகுதான் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள "வாடிவாசல்" ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.
கடந்த சில வருடங்களில் சூர்யாவின் படங்களின் ஆரம்பம், படப்பிடிப்பு, வெளியீடு ஆகியவை குறித்து குழப்பமான தகவல்கள் வெளிவருவது அவருடைய ரசிகர்களையும் சேர்த்து குழப்பி வருகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!