
சிவாஜி குடும்பத்தில் சொத்து பிரச்னை ; ராம்குமார், பிரபு மீது சகோதரிகள் வழக்கு
தமிழ் சினிமாவில் நடிப்புக்கே திலகமாக திகழ்ந்தவர் சிவாஜி கணேசன். நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள இவர் கடந்த 2001ம் ஆண்டு 72வது வயதில் மறைந்தார். இவருக்கு ராம்குமார், பிரபு என்ற மகன்களும், சாந்தி, ராஜ்வி என்ற மகள்களும் உள்ளனர். ராம்குமார், தயாரிப்பு பணியிலும், சில படங்களிலும் நடித்துள்ளார். பிரபு, சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தார்.
சிவாஜிக்கு கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளன. இவரது மறைவுக்கு பின் மகன்கள் ராம்குமார், பிரபு அதை நிர்வகித்து வந்தனர். இந்நிலையில் தங்களுக்கு தெரியாமல் சில சொத்துக்களை சகோதரர்கள் ராம்குமார், பிரபு விற்றுவிட்டதாகவும், சில சொத்துக்களை அவர்களின் மகன்கள் பெயருக்கு மாற்றிவிட்டதாகவும் சென்னை ஐகோர்ட்டில் சிவாஜியின் மகள்கள் சாந்தி, ராஜ்வி வழக்கு தொடர்ந்துள்ளனர்.
மேலும் தனது தந்தை உயில் எழுதி வைக்காத நிலையில் பிரபு, ராம்குமார் அவர்களாகவே ஒரு உயில் தயாரித்து தங்களை ஏமாற்றிவிட்டனர். தங்கள் தாய்வழி சொத்துக்களின் தங்களுக்கு பங்கு தரவில்லை. தந்தை சேர்த்து வைத்திருந்த பல கோடி மதிப்பிலான தங்க, வைர, வெள்ளி பொருட்களையும் தராமல் ஏமாற்றிவிட்டனர். எங்கள் தந்தையின் சொத்துக்களில் தங்களுக்கும் உரிமை உள்ளதால் இந்த பிரச்சனையில் நீதிமன்றம் தலையிட்டு உரிய வகையில் பாகப்பிரிவினை செய்து தர வேண்டும் என கேட்டுள்ளனர்.
இந்த வழக்கில் ராம்குமாரின் மகன் துஷ்யந்த், பிரபுவின் மகன் விக்ரம் பிரபு ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!