
பான்-இந்தியா : புது விளக்கம் தரும் நானி
நானி தற்போது நடித்துள்ள "அன்டே சுந்தரினிக்கி" தெலுங்குப் படம் தமிழில் "அடடே சுந்தரம்" என்ற பெயரிலும், மலையாளத்தில் "ஆஹா சுந்தரா" என்ற பெயரிலும் வெளியாக உள்ளது. "நேரம், ராஜா ராணி," படங்களில் கதாநாயகியாக நடித்த நஸ்ரியா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
தென்னிந்தியாவிலிருந்து வெளிவரும் முக்கிய ஹீரோக்களின் படங்கள் பான்--இந்தியா படங்களாக வெளிவந்து கொண்டிருக்கும் இந்த சூழலில் "பான்--இந்தியா" படம் பற்றி புதிய விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளார் நானி.
“ஒரு தெலுங்குப் படத்தை பல மொழிகளில் டப்பிங் செய்து மற்ற மாநிலங்களிலும் வெளியிடுவதை பான்--இந்தியா என்று சொல்வதிலும், என்னை பான்--இந்தியா ஹீரோ என்று சொல்வதிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்தியாவின் மற்ற மூலைகளிலிருந்தும் மக்கள் அந்தப் படங்களைப் பார்க்கும் வகையில் உருவாக்க வேண்டும். குறைந்த பட்சம் ஓடிடி தளங்களிலாவது அவர்களைப் பார்க்க வைக்க வேண்டும். ஒரு படத்தை இந்தியாவின் சாத்தியமான எல்லா மொழிகளிலும் வெளியிடுவதை விட அந்தப் படத்தின் கருத்தாக்கம் பேசப்படும் விதத்தில் படத்தை உருவாக்க வேண்டும் என விரும்புகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
மலையாள நடிகரான துல்கர் சல்மான் கூட “பான்--இந்தியா என்கிற வார்த்தை எரிச்சலூட்டுகிறது,” என்று சமீபத்தில் சொல்லியிருந்தார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!