
மன்மதலீலையை வெளியிட கோர்ட் அனுமதி
நாளை (ஏப் 1) படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டாம் குத்து படத்தை தயாரித்த பிளையிங் ஹார்ஸ் நிறுவனம் படத்துக்கு தடைகேட்டு வழக்கு தொடர்ந்தது. அந்த நிறுவனம் தாக்கல் செய்திருந்த மனுவில் "எங்கள் நிறுவனம் தயாரித்த இரண்டாம் குத்து என்ற திரைப்படத்தை படத்தின் வினியோக உரிமையை, ராக் போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வாங்கி இருந்தது. படத்தால் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக கூறி எங்களுக்கு தர வேண்டிய ஒரு கோடியே 40 லட்சம் 42 ஆயிரத்து 732 ரூபாயை வழங்கவில்லை.
இந்த நிலையில் அசோக் செல்வன் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மன்மத லீலை என்ற படத்தை தயாரித்துள்ளது. எங்களுக்கு தர வேண்டிய தொகையை தராவிட்டால் மன்மதலீலை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மன்மதலீலை தயாரிப்பாளர், 30 லட்சம் ரூபாயை 4 வாரங்களில் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும் என்கிற நிபந்தனையுடன் மன்மதலீலை படத்தை வெளியிட அனுமதி வழங்கியது. அதோடு இந்த பிரச்சினையை சமரச தீர்வு மையத்தில் பேசி தீர்த்துக் கொள்ளுமாறும் உத்தரவிட்டது. இதன் மூலம் நாளை மன்மதலீலை வெளியாவது உறுதியாகி இருக்கிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!