
பாலகிருஷ்ணாவின் அகண்டா 2 தள்ளிப் போனது ஏன் ?
படம் மீதான அதிக எதிர்பார்ப்பும், முன்பதிவும் இருந்த நிலையில் இப்படி ஒரு சட்டச் சிக்கல் இப்படத்திற்கு வந்ததை தயாரிப்பு நிறுவனம் சரியாகக் கையாளவில்லை என தெலுங்குத் திரையுலகத்தில் கருத்து நிலவுகிறது. ஒரு முன்னணி நடிகரின் படம் இப்படி கடைசி நேரத்தில் வெளியாகாமல் தள்ளிப் போவது இதுவரை நடக்காத ஒன்று என அவர்கள் வருத்தப்படுகிறார்கள்.
இந்தப் படத்திற்கான தடை உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. "அகண்டா 2" படத்தை 14 ரீல்ஸ் பிளஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. அந்த நிறுவனம் இதற்கு முன்பு 14 ரீல்ஸ் என்டர்டெயின்மென்ட் என்ற பெயரில் படத் தயாரிப்பில் இருந்த போது, ஈராஸ் இன்டர்நேஷனல் மீடியா நிறுவனத்திற்குத் தர வேண்டிய சுமார் 28 கோடி ரூபாயைத் தராமல் இருந்துள்ளது. நீண்ட நாள் நிலுவையில் இருந்த அந்தத் தொகையைத் தரவேண்டுமென ஈராஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கு காரணமாகவே "அகண்டா 2" படத்திற்கு அடுத்த உத்தரவு தரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இப்படத்தை நிறைய தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். படம் தள்ளிப் போனதால் அங்கு மீண்டும் தியேட்டர்களைப் பெறுவதில் சிக்கல் இருக்கும் என்கிறார்கள். இதனிடையே, தயாரிப்பு நிறுவனம் பேச்சு வார்த்தையில் இறங்கியுள்ளதாகவும் விரைவில் இந்த சிக்கலைத் தீர்க்க முயற்சித்து படத்தை வெளியிடுவார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும், 14 ரீல்ஸ் பிளஸ் நிறுவனம் சார்பில் மேல்முறையீடும் செய்ய உள்ளார்களாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!