
ஆயிரத்தில் ஒருவன் பற்றி செல்வராகவன் திடீர் பதிவு
செல்வராகவன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில், கார்த்தி, ஆன்ட்ரியா, ரீமா சென், பார்த்திபன் மற்றும் பலர் நடித்த அந்தப் படம் ஒரு "அட்வென்ச்சர்" படமாக அமைந்தது. படம் வெளியாகி இத்தனை வருடங்களாகியும் அந்தப் படத்தை இப்போதும் சிலாகித்துப் பேசி வருகிறார்கள் ரசிகர்கள்.
அதைப் புரிந்து கொண்டு தான் "ஆயிரத்தில் ஒருவன்" படத்தின் இரண்டாம் பாகத்தைப் பற்றிய அறிவிப்பையும் இந்த வருடப் புத்தாண்டில் அறிவித்தார் செல்வராகவன். தனுஷ் நடிக்க 2024ம் ஆண்டு அந்தப் படம் வரும் என தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் இன்று திடீரென "ஆயிரத்தில் ஒருவன்" படத்தின் முதல் பாகத்தைப் பற்றி டுவிட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார் செல்வராகவன். அதில், “ஆயிரத்தில் ஒருவன்" படத்தின் உண்மையான பட்ஜெட் 18 கோடி தான். ஆனால், அதை ஒரு மெகா பட்ஜெட் படம் என உயர்த்திக் காட்டுவதற்காக 32 கோடி பட்ஜெட் என அறிவிக்க முடிவு செய்தோம். என்ன ஒரு முட்டாள்தனம். படத்தின் உண்மையான பட்ஜெட்டை படம் வசூல் செய்திருந்தாலும், அது ஆவரேஜ் வசூல் என்று தான் சொல்லப்பட்டது. என்ன முரண்பாடு இருந்தாலும் பொய் சொல்லக் கூடாது என்று கற்றுக் கொண்டேன்,” என 12 வருட வரலாற்றைக் கிளறிவிட்டுள்ளார்.
செல்வராகவன் பதிவின்படி பார்த்தால் சினிமாவில் பலரும் பொய்யான பட்ஜெட்டை சொல்லுவார்கள் என்ற உண்மை வெளிப்படுகிறது. அந்தப் பொய்க்கு அப்போது செல்வராகவனும் உடந்தையாகத்தான் இருந்துள்ளார். இப்போது, பொய் சொல்லக் கற்றுக் கொண்டேன் என்று சொல்வதற்கான அவசியம் என்னவென்று தெரியவில்லை.
இனி, ஒரு படத்தின் பட்ஜெட் 500 கோடி என்று யாராவது அளந்துவிட்டால், அதன் உண்மையான பட்ஜெட் 280 கோடிதான் இருக்கும் என சாதாரண ரசிகர்களும் கணக்கு போட்டுக் கொள்வார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!