
மதுவிலக்கு கொண்டுவந்தால் கள்ளச்சாராயம் அதிகமாகும்: கமல் கருத்து
ஜூலை 06, 2024
Advertisement
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ள படம் ‛இந்தியன் 2". லைகா இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியான நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜூலை மாதம் 12ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், புரமோஷன் வேலைகளில் படக்குழு பிஸியாக இருக்கின்றது.
கமல்ஹாசன்
சென்னையில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர்கள் கமல்ஹாசன், சித்தார்த், இயக்குனர் ஷங்கர் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது கமல்ஹாசன் பேசியதாவது: இந்தியன் 2 திரைப்படம் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இரண்டு பாகங்களாக தயாராகியுள்ளது. இந்தியன் 2 திரைப்படத்தை விட இந்தியன் 3 படத்திற்காக நான் ஆவலாக காத்துகொண்டு இருக்கின்றேன். அதற்காக இந்தியன் 2 பிடிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை. எனக்கு பிடித்த காட்சிகள் இந்த இரண்டு பாகங்களிலும் இருக்கின்றன. இந்தியன் 2 படத்தின் மூலம் என்னை தாத்தா என்று அழைக்கிறார்கள். அது பற்றி கவலைப்படவில்லை. காந்தியை, ஈ.வெ.ரா.,வை கூட தாத்தா என்றுதான் அழைத்தார்கள். ஆம், நானும் தாத்தாதான்.
கள்ளச்சாராயத்தை பற்றி பல இடத்தில் கூறியுள்ளேன். கள்ளச்சாராயம் வருவதற்கான காரணமே மதுவிலக்கு தான். இது உடலுக்கு கெடுதல் என அனைவருமே மனதில் முடிவு செய்ய வேண்டும். விஷம் இது தான், இதனை உண்ணக்கூடாது என்னும் உணர்வு பொதுவெளியில் வர வேண்டும். அப்போது தான் இது போகும். மதுவிலக்கு பண்ணிவைத்தால் கள்ளச்சாராயம் அதிகமாகும். அதனால் கள்ளச்சந்தைகள் பெருகும், கள்வர்கள் பெருகுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
சித்தார்த்
சித்தார்த் கூறுகையில், ‛‛ஒருவர் (ஷங்கர்) என்னை அறிமுகப்படுத்தினார். ஒருவர் (கமல்ஹாசன் என்னை நடிக்க வைக்க ஆர்வப்படுத்தினார். இவர்களுடன் என்னை இங்கு அமர வைத்ததற்காக நன்றி. என்னிடம் இந்தியன் 2, இந்தியன் 3ல் எது பிடிக்கும் எனக் கேட்டால், இந்தியன் 4 தான் பிடிக்கும். இந்த படங்களின் ருசியை காண்பித்துவிட்டனர். அதனால் இந்தியன் 4 படத்திலும் நான் இருப்பேன். அந்த ருசியையும் சீக்கிரம் காண்பித்துவிடுங்கள்; சந்தோஷமாக இருக்கும்"" என்றார்.
ஷங்கர்
இயக்குனர் ஷங்கர் பேசியதாவது: இந்தியன் படப்பிடிப்பின் முதல் நாளில் கமலின் தோற்றம் கொடுத்த சிலிர்ப்பு, இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு அதை விட பல மடங்கு அதிகமாக இருந்தது. முதல் பாகத்தில் தராசுல ஒரு பக்கம் கமல், இன்னொரு பக்கம் எல்லா தொழில்நுட்ப கலைஞர்களம் இருந்தாங்க, சமமாக இருந்தது. ஆனால் இந்தியன் 2வில் கமலின் நடிப்பாற்றலால் தராசு ஒரு பக்கமாக சாய்ந்துவிட்டது. அந்தளவிற்கு அவர் வரும் காட்சிகள் பிரமிப்பை ஏற்படுத்தும். இந்தியன் 2, இந்தியன் 3 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய 3 படங்களும் ஒரே நேரத்தில் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கொரோனா காலத்தில் இந்தியன் படத்திற்காக அனைத்தையும் எழுதி முடித்துவிட்டு, இன்னும் நேரமும் இருந்ததால் வேறு சில கதைகளையும் எழுத முடிந்தது. இவ்வாறு அவர் பேசினார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!