
நயன்தாரா - விக்னேஷ் சிவனை கைது செய்யுங்கள் : போலீஸ் கமிஷனரகத்தில் புகார்
சென்னை, சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன்; சமூக ஆர்வலர். இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார்: அஜித் நடிப்பில், விக்னேஷ் சிவன், "ஏகே 62" என்ற படத்தை இயக்க இருப்பதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி வருகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக, விக்னேஷ் சிவன் வீட்டில் பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளார்.
விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் நெருங்கி பழகி வருகின்றனர். இவர்கள் "ரவுடி பிக்சர்ஸ்" என்ற நிறுவனத்தை துவங்கி உள்ளனர். பட்டாசு வெடித்து கொண்டாடியதில், ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களும் பங்கேற்றுள்ளனர். ரவுடிகளை ஒழிக்க, தமிழக போலீஸ் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
ஆனால், சமூக பொறுப்பின்றி, இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும், ரவுடிகளை ஊக்கப்படுத்தும் விதமாக, ரவுடி பிக்சர்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனம் துவங்கி இருப்பது, பொது மக்களை அதிர்ச்சியடைச் செய்துள்ளது. ரவுடி பிக்சர்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்தை தடை செய்ய வேண்டும். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவை கைது செய்ய வேண்டும். இருவர் மீதும், வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
போலீஸ் அதிகாரிகள் சிலர் கூறுகையில், "ரவுடி பிக்சர்ஸ் என பெயர் சூட்டுவது அநாகரிகம். இப்பெயரே பொது மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். விக்னேஷ் சிவன், நயன்தாரா பட நிறுவனத்திற்கு நல்ல பெயரை சூட்ட வேண்டும். தேவையில்லாத பிரச்னைகள் குறையும்" என்றனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!