
ஓடிடி தளங்களுக்குத் தணிக்கை இல்லையா?
டிச 18, 2025
Advertisement
2020ல் கொரானோ தாக்கம் இந்தியாவில் வந்த போது சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. மக்களின் பொழுதுபோக்கும் நேரம் அப்படியே ஓடிடி தளங்கள் பக்கம் திரும்பியது. புதிய திரைப்படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடும் அளவிற்கு அதன் வளர்ச்சி குறுகிய காலத்தில் இருந்தது. அதன்பின் வெப் சீரிஸ்கள், நேரடி சினிமா வெளியீடுகள், பல நிகழ்ச்சிகள் என ஒவ்வொரு ஓடிடி தளமும் எந்தவித தணிக்கையும் இல்லாமல் அவரவர் விருப்பத்திற்கு கொடுக்க ஆரம்பித்தன.
சில வெப் சீரிஸ்கள், சில நிகழ்ச்சிகள் சர்ச்சைக்குரியவையாக அமைந்து அதற்கு எதிர்ப்பு எழுந்தது. ஆன்மிகம், மதம் சார்ந்த சில வெப் தொடர்களுக்கான எதிர்ப்பு கடுமையாக இருந்தது. அதன்பின் அப்படி எதிர்ப்பு எழுந்த சில தொடர்களை ஒளிபரப்பு செய்யாமலேயே அவற்றின் முன்னோட்டத்துடன் அந்த நிறுவனங்கள் நிறுத்தின.
அதைத் தொடர்ந்து ஓடிடியில் ஒளிபரப்பாகும் வெப் சீரிஸ்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு மத்திய திரைப்படத் தணிக்கைக் குழு தலையிட்டு, அவற்றிற்கு சான்று அளிக்க வேண்டும் என்ற குரல் ஒலிக்க ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து அவற்றிற்கான ஒழுங்கு முறை கட்டுப்பாடுகள், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு பின்னர் அவை வெளியிடப்பட்டன.
இருந்தாலும் சில வெப் தொடர்கள் எந்தவிதமான ஒழுங்கு முறை கட்டுப்பாடுகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றாமல் வந்தன. அதனால், மீண்டும் தணிக்கை வாரியம் தலையிட வேண்டும் என்று கருத்துக்கள் வர ஆரம்பித்தன.
இந்நிலையில் நேற்று லோக்சபாவில் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி., விஷ்ணுபிரசாத் எழுப்பிய இது குறித்த கேள்வி ஒன்றிற்கு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல் முருகன் பதிலளித்தார்.
அதில்,
மத்திய திரைப்பட சான்றளிக்கும் வாரியம் (சிபிஎப்சி) என்பது மக்களின் பொழுதுபோக்கிற்காகத் தயாரிக்கப்படும் திரைப்படங்களை தணிக்கை செய்து சான்றளிப்பதற்காக, 1952ம் ஆண்டு திரைப்படச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள், 2021ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பம் (இடைத்தரகர் வழிகாட்டுதல் நெறிமுறைகள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைக் குறியீடு) விதிகளின் பகுதி III-ன் கீழ் ஒழுங்குபடுத்தப்படுகிறது.
இந்த நெறிமுறைக் குறியீடு, சட்டத்தால் தடைசெய்யப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை வெளியிடுவதை ஓடிடி தளங்கள் தவிர்க்க வேண்டும் என்றும், அவை விதிகளில் உள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி வயது அடிப்படையில் வகைப்பாடு செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
இந்த விதிமுறைகள், ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் தொடர்பான விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்கும், பொதுமக்களின் குறைகளுக்கு உரிய முறையில் தீர்வு காண்பதற்கும் ஒரு மும்முனை நிறுவன அமைப்பை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டுகிறது.
நிலை I: வெளியீட்டாளர்களால் கடைபிடிக்கப்படும் சுய-ஒழுங்குமுறை
நிலை II: வெளியீட்டாளர்களின் சுய-ஒழுங்குமுறை அமைப்புகளால் கண்காணிக்கப்படும் சுய-ஒழுங்குமுறை
நிலை III: மத்திய அரசின் மேற்பார்வை அமைப்பு.”
என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆக, ஓடிடி தளங்களுக்கான தணிக்கையை தணிக்கை வாரியம் மேற்கொள்ள இப்போதைக்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!