
நாகார்ஜுனா - ராம் கோபால் வர்மாவின் சிவா ரீ-ரிலீஸ்
பிற்காலத்தில் இந்தியாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராகப் பேசப்பட்ட ராம்கோபால் வர்மா இயக்கிய முதல் படம் "சிவா". அப்படம் தமிழில் "உதயம்" என்ற பெயரில் டப்பிங் ஆகி இங்கும் 175 நாட்களைக் கடந்து ஓடி வெள்ளிவிழாப் படமாக அமைந்தது. அந்தக் காலத்து கல்லூரி இளைஞர்களைக் கவர்ந்த ஒரு படமாக தமிழ், தெலுங்கில் அமைந்தது.
36 ஆண்டுகளுக்குப் பிறகு அப்படத்தை 4 கே தொழில்நுட்பத்திற்கு மாற்றி, டால்பி அட்மாஸ் சவுண்ட் உடன் ரீ-ரிலீஸ் செய்ய உள்ளார்கள். நாகார்ஜுனாவின் அப்பாவும் மறைந்த நடிகருமான நாகேஸ்வரராவ் ஆரம்பித்த தயாரிப்பு நிறுவனமான அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் 50வது ஆண்டு விழாவை முன்னிட்டு இப்படத்தை வெளியிட உள்ளார்கள்.
படத்தின் ரிலீஸ் குறித்து நாகார்ஜுனா கூறுகையில், "சிவா எனக்கு ஒரு புதிய அடையாளத்தை அளித்த படம். அது என்னை ஒரு "ஐகான்" ஆக மாற்றியது. இந்தப் படம் இன்னும் மக்களுடன் ஒத்துப்போவது ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு கல்ட் வெற்றியாக ஆக்கிய பார்வையாளர்களுக்கு நன்றி செலுத்தவும், ஆன்லைனில் மட்டுமே பார்த்த ஒரு தலைமுறைக்கு இதை மீண்டும் அறிமுகப்படுத்தவும் விரும்பினோம்," என்று தெரிவித்துள்ளார்.
ஆந்திரா, தெலங்கானாவில் "கூலி" படத்துடன் "சிவா" படத்தின் வீடியோ முன்னோட்டம் திரையிடப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்கள்.
"கூலி" படம் வெளியான பிறகு இன்றைய ரசிகர்களிடம் நாகார்ஜுனா பிரபலமடையலாம். அதனால், டப்பிங் ஆகி வந்த "சிவா" படத்தின் தமிழ்ப் பதிப்பான "உதயம்" படத்தை ரீ-ரிலீஸ் செய்தால் கூட வரவேற்பைப் பெறலாம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!